முடிந்தது மீன்பிடித் தடைகாலம்.... 400 டன் மீன்களை அள்ளி வந்த கடலூர் மீனவர்கள் !
கடலூர்: கடலூரில் மீன்பிடித் தடைகாலம் முடிந்து கடலுக்கு சென்ற சென்றவர்களுக்கு 400 டன்களுக்கும் அதிகமான மீன்கள் வலையில் சிக்கியதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மீனகளின் இனப்பெருக்கத்துக்காக ஆண்டுதோறும் 45 நாள்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க தடைவிதிக்கப்படும். கடந்த 16 ஆண்டுகளாக மீன்பிடி தடைகாலம் நடைமுறையில் தொடர்கிறது. இதற்கு மீனவர்களும் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.
அதன்படி, இந்தாண்டு கடந்த ஏப்ரல் 15-ம் தேதி முதல் மே 29-ம் தேதி வரை 45 நாள்களுக்கு தடைவிதிக்கப்பட்டது. இதையொட்டி, விசைப்படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. தடை காலத்தில் படகுகளை சீரமைத்தல், இயந்திரங்கள், மீன்பிடி சாதனங்களை பழுது நீக்குதல் போன்ற பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தடைகாலம் நேற்றுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து மீனவர்கள் வழக்கம் போல் மீன்பிடிக்க சென்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள தேவனாம்பட்டினம், சொத்திகுப்பம், சிங்காரதோப்பு, தாழங்குடா உள்ளிட்ட 40-க்கு மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் சுமார் 3000-க்கு மேற்பட்ட விசைப்படகுகள், பைபர் படகுகள் மூலம் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இதில், மீனவர்களின் வலைகளில் வஞ்ஜரம், சங்கரா, மத்தி, பாறை உள்ளிட்ட பலவகையான மீன்கள் சிக்கின. இதனையடுத்து கடலூர் துறைமுகத்திற்கு 400 டன்னுக்கும் அதிகமான மீன்களுடன் மீனவர்கள் கரை திரும்பினர். மீன்களின் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளதால், மீன் விலை குறையும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.