கண்களில் நிரம்பி வழியும் கண்ணீர்க் கடல் - வெள்ளத்தால் தத்தளிக்கும் கடலூர் மக்கள்!
கடலூர்: கடலூர்... ஊரின் பெயரிலேயே கடலை வைத்திருப்பதாலோ என்னவோ, அந்த மக்களின் கண்கள் கண்ணீரால் கடலாகிப் போய் கொட்டுகின்றது அடித்துப் புரட்டிப் போட்ட வெள்ளப் பாதிப்புகளால்.
இந்நிலையில் தலைநகர் சென்னைக்கு கொடுத்த முக்கியத்துவத்தினை தங்களுக்கு அளிக்கவில்லை என்று கடலூர் மக்கள் கண்ணீர் விடுகின்றனர்.
பெரிய காட்டுப்பாளையம், விசூர், ஆகிய பண்ருட்டி தாலுக்கா கிராமங்களும் குறிஞ்சிபாடி தாலுக்காவை சேர்ந்த கல்லணம், பூதபாண்டி ஆகிய கிராமங்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்து போய்விட்டன. ஐம்பதாயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல், வெற்றிலை, மரவள்ளி போன்ற பயிர்கள் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டன.
கடலூர் சிப்காட் தொழிற்சாலை முழுமையாக நாசமடைந்து, ஆயிரக்கணக்கான வீடுகள் நாசமடைந்து, 630 கிராமங்களை சேர்ந்த 37,500 குடும்பங்களை சேர்ந்த சுமார் 15 லட்ச மக்கள் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் தொண்டு நிறுவங்கள் கொண்டு வந்து தரும் அரிசிக்கும், பிஸ்கட்டாலேயே கடந்த ஒரு மாத காலமாக உயிர் வாழ்ந்து வருகிறார்கள்.
பிழைப்பதற்க்கு வேலைக்காவது செல்லலாம் என்றால் சாலைகள் இல்லை, அமைச்சர்கள் அரசு அதிகாரிகள் எல்லாம் தினம் பெய்யும் மழையை போல தினம் ஒரு ஏரியை திறந்து விடுவதை மட்டுமே தொழிலாக செய்கிறார்கள்.
அதனால் விடாது பெய்யும் மழை போல வெள்ளமும் விடாது ஏறிக்கொண்டிருக்கிறது. அவர்கள் இயல்பு நிலைக்கு வர பல மாதங்கள் பிடிக்கும். இயல்பு நிலை திரும்பி வந்தாலும் பழைய வாழ்க்கை அவர்களுக்கு திரும்ப கிடைக்க வருடங்கள் பல பிடிக்கும் என்பது மனதை குத்திக் கிழிக்கும் உண்மை.