அண்ணாமலை பல்கலை. மாணவி கழுத்தை அறுத்த நவீன் விஷம் குடித்ததால் பரபரப்பு
காதலியின் கழுத்தை அறுத்த நவீன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
சிதம்பரம்: சிதம்பரத்தில் காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவி லாவண்யாவின் கழுத்தை அறுத்த நவீன் விஷம் குடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நவீனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விடுதி முன்பு நடந்த இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வேலூர் மாவட்டம் நாட்டறாம்பள்ளி தாலுகா கேதண்டபட்டி கிராமத்தை சேர்ந்தவர் முனிராசு. இவருடைய மகள் லாவண்யா 23, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி., தோட்டக்கலை 2-ம் ஆண்டு படித்து வருகிறார். பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தாமரை விடுதியில் தங்கி படிக்கிறார். லாவண்யாவும், நவீன்குமார் 27, என்பவரும் சிறுவயதிலிருந்தே பழக்கம் என்பதால், நண்பர்களாகி, பிறகு ஒருவரையொருவர் விரும்பி வந்ததாக தெரிகிறது. என்ஜினியரிங் படித்த நவீன்குமார், சென்னையிலேயே ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். லாவண்யாவும், நவீன்குமாரும் தினமும் செல்போனிலேயே பேசிக் கொள்வர்.
இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக காதல் ஜோடிக்குள் பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் லாவண்யா நவீன்குமாருடன் பேசுவதை தவிர்த்துள்ளதுடன், போன் செய்தாலும் அழைப்புகளை எடுக்காமல் இருந்திருக்கிறார்.இதனால் மன வருத்தத்தில் இருந்த நவீன்குமார், ஒன்று லாவண்யாவை நேரில் பார்த்து சமாதானம் செய்வது, இல்லையென்றால் கொலை செய்வது என திட்டம் தீட்டி, ஒரு கத்தியையும் வாங்கி மறைத்து கொண்டு நேற்று சிதம்பரம் வந்தார்.
கல்லூரி செல்ல விடுதி வழியாக வந்த லாவண்யாவை நவீன்குமார் மறித்து பேச முயன்றார். ஆனால் லாவண்யா பேச மறுத்து வேகமாக செல்ல முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த நவீன், லாவண்யாவை கீழே தள்ளிவிட்டு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் லாவண்யாவின் கழுத்தை அறுத்தார். இதனால் லாவண்யா அலறிதுடிக்க அங்கிருந்த பொது மக்கள் அருகிலிருந்த கற்கள், கட்டைகளை எடுத்து நவீன்குமாரை தாக்கினர். அத்துடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய லாவண்யாவை மீட்டு சிகிச்சைக்கு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் நவீன்குமாரை பொது மக்கள் வெளுத்து வாங்கினர். இதனால் தலையில் படுகாயமடைந்தார் நவீன்குமார். பின்னர் அவரை போலீசாரிடம் பொதுமக்களே ஒப்படைத்தனர். அதன்பின்னர் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு நவீன்குமார் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். அப்போது திடீரென நவீன்குமார் மயங்கிய நிலைக்கு சென்றார். தான் ஏற்கனவே விஷம் குடித்து விட்டதாகவும் தெரிவித்ததால் அங்கிருந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
இதனால் பதறிப் போன மருத்துவர்கள், உடனடியாக அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு நவீன்குமாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.