குடும்பத் தகராறு... கத்தியால் மாறி மாறி குத்திக் கொண்ட தந்தை - மகன்: மருத்துவமனையில் அனுமதி
கம்பம்: கம்பத்தில் குடும்பத்தகராறில் ஒருவரையொருவர் மாறி, மாறி கத்தியால் குத்திக் கொண்ட தந்தை மற்றும் மகன் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப் பட்டுள்ளனர்.
தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த விவசாயி கந்தசாமி(50) விவசாயி. இவர் நேற்று தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரத்தில் தனது மனைவியை அவர் அடித்துள்ளார்.
தந்தை தனது தாயை அடிப்பதைக் கண்டு கோபமடைந்துள்ளார் அவர்களது மகன் சிவகுருநாதன். தாயை அடிக்க வேண்டாம் என அவர் தனது தந்தையைக் கண்டித்துள்ளார்.
இதனால் தந்தை, மகன் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கந்தசாமி மகன் என்றும் பாராமல் சிவகுருநாதனைக் கத்தியால் குத்தியுள்ளார். பதிலுக்கு தானும் தந்தை கந்தசாமியை கத்தியால் குத்தியுள்ளார் சிவகுருநாதன்.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தார் மீட்டு சிகிச்சைக்காக அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.
தகவலறிந்து மருத்துவமனைக்கு விரைந்து வந்த போலீசார், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்பத் தகராறில் தந்தையும், மகனும் மாறி, மாறி கத்தியால் குத்திக் கொண்ட சம்பவம் கம்பம் பகுதியில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.