கம்பத்தில் 14 ஆண்டுகள் கழித்துக் கொண்டாடப்படும் ஆனித் தேரோட்ட விழா- வீடியோ
தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள கம்பராய பெருமாள் கோயில் ஆனித் தேரோட்ட விழா 14 ஆண்டுகள் கழித்து நேற்று சிறப்பாகத் தொடங்கியது.
தேனி: தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள கம்பராயப் பெருமாள் திருக்கோயிலில் ஆனித் தேரோட்ட விழா 14 ஆண்டுகள் கழித்து நேற்று தொடங்கியது. இந்தத் திருவிழா மூன்று நாட்கள் நடைபெறும்.
தேனி மாவட்டம், கம்பத்தில் உள்ளது கம்பராயப் பெருமாள் கோயில். இந்தக் கோயிலில் காசி விஸ்வநாதர் கோயிலும் உள்ளது. ஒரே கோயில் வளாகத்தில் பெருமாளுக்கும் சிவனுக்கும் தனித்தனி கோயில்கள் இருப்பது வெகு அபூர்வம்.
கம்பராயப் பெருமாள் கோயிலில் கடந்த 2003 ஆம் ஆண்டு, ஆனித் தேரோட்டம் நடந்தது. அதன் பிறகு 14 வருடங்கள் கழித்து நேற்று தேரோட்டம் நடைபெற்றது. அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
நேற்று நிலையை விட்டு கிளம்பியுள்ள தேர் நகரை வலம் வந்து, 13ஆம் தேதி நிலைக்கு வரும். கடந்த 4ஆம் தேதி ஆனித் தேரோட்ட விழா கொடியேற்றத்துடன் ஆரம்பித்தது. தேரோட்டத்தை முன்னிட்டு பாதுகாப்பு வழங்க 300 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.