கம்பம் கோவில் பட்டத்து மாடு மரணம்- மரியாதை செலுத்திய முஸ்லிம்கள்- நெகழ்ச்சியான இறுதி ஊர்வலம்
கம்பம்: கம்பம் நந்தகோபாலன் கோவிலில் மரணமடைந்த பட்டத்து மாட்டுக்கு மதங்களைக் கடந்து ஒட்டுமொத்த மக்களும் கண்ணீருடன் இறுதி மரியாதை செலுத்தினர். மாட்டின் இறுதி ஊர்வலத்தின் போது பள்ளிவாசல் அருகே முஸ்லிம் மக்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.
கம்பத்தில் உள்ள நந்தகோபாலன் கோவிலில் சாமி சிலைகள் எதுவும் இல்லை. இங்கே உள்ள பட்டத்து மாடுதான் பிரதான தெய்வம். சாமிக்கு செய்யப்படும் அனைத்து மரியாதைகளும் சடங்குகளும் பட்டத்து மாட்டுக்குதான் செய்யப்படும்.
பட்டத்து மாடு
இக்கோவிலில் பராமரிக்கப்படும் மாடுகளில் பட்டத்து மாடாக ஒன்றை தேர்வு செய்து வழிபடுவர். பட்டத்து மாடு தேர்ந்தெடுக்கப்படும் நிகழ்ச்சியானது பிரமாண்டமாக நடைபெறும். தேர்ந்தெடுக்கப்படும் பட்டத்து மாட்டுக்கு ராஜ அலங்காரமும் செய்யப்படும்.
400 மாடுகள்
இக்கோவில் தொழுவத்தில் 400-க்கும் மேற்பட்ட மாடுகள் பராமரிக்கப்படுகின்றன. ஒக்கலிகர் சமூகத்தினர் இக்கோவிலை பராமரித்தாலும் அனைத்து தரப்பு மக்களும் வழிபாடு நடத்திச் செல்வர். இந்த கோவிலின் பட்டத்து மாடு நேற்று காலை மரணமடைந்தது.
இறுதி சடங்குகள்
இச்செய்தி கம்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு பரவியதைத் தொடர்ந்து மக்கள் பெருமளவில் கோவிலில் குவிந்தனர். மரணித்த மாட்டுக்கு மனிதர்களுக்கு செய்வதைப் போல இறுதி சடங்குகள் அனைத்துமே செய்யப்பட்டன.
இறுதி ஊர்வலம்
பின்னர் மனிதர்கள் இறந்தால் எப்படி இறுதி ஊர்வலம் நடத்தப்படுமோ அதுபோல பட்டத்து மாட்டுக்கும் இறுதி ஊர்வலம் நடத்தப்பட்டது.
முஸ்லிம்கள் அஞ்சலி
இந்த இறுதி ஊர்வலம் கம்பம் பெரிய பள்ளிவாசல் வழியாக சென்றது. அப்போது முஸ்லிம் மக்கள் திரண்டு இறந்த பசுமாட்டுக்கு இறுதி மரியாதை செலுத்தியது பெரும் நெகிழ்ச்சியாக இருந்தது.
மதநல்லிணக்கம்
மாடுகளின் பெயரால் மனிதர்களை பிரித்து ஒருவரை ஒருவர் அடித்து கொள்ள வைக்க ஒரு கூட்டமே சதி செய்து கொண்டிருக்கிறது... ஆனால் சமூக நீதியின் தாய் மண்ணான தமிழகமோ மாட்டின் பெயரால் மதநல்லிணக்கத்தை நிலைநாட்டியிருக்கிறது!
கட்டுப்பாடு
மேலும் மாட்டுக்கு இறுதிச் சடங்குகளை செய்பவர்கள் பெற்றோர் உட்பட யாருடைய சவத்தையுமே நேரில் பார்க்கவும் மாட்டார்கள்... துக்க வீடுகளுக்கும் செல்லமாட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.