திருக்குறளை தேசிய நூலாக்க வேண்டும்… ரூ.1க்கு டீ விற்று நூதனப் போராட்டம்
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழர்களிடையே நீண்ட நாட்களாக எழுப்பப்பட்டு வருகிறது. அந்தக் கோரிக்கை திருவள்ளுவர் தினமான இன்று தமிழ் ஆர்வலர் ஒருவர் நூதன முறையில் எழுப்பியுள்ளா
தஞ்சாவூர்: திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று கோரி நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகிறார் தமிழ் ஆர்வலரான தங்கவேலனார்.
திருக்குறள் நூல் உலகத்தில் உள்ள அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு அனைவராலும் ஏற்றுக் கொண்ட பொதுமறையாகும். ஆனாலும் இந்தியாவில் மட்டும் திருக்குறவையும், திருவள்ளுவரையும் ஏற்றுக் கொள்ளாத போக்கே நிலவி வருகிறது. இதனால் தமிழர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பும், அதிருப்தியும் இருந்து வருகிறது.
தமிழ்நாட்டில் இருந்து திருவள்ளுவரின் சிலையை வட மாநிலத்திற்கு கொண்டு போகிறேன் என்று பாஜக எம்பி தருண் விஜய் கொண்டு சென்று அதனை ஒரு பூங்காவின் ஓரத்தில் போட்ட வைத்தார். இதற்கு தமிழகத்தில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, வள்ளுவர் சிலை அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்ந்து மத்திய அரசால் புறக்கணிக்கப்படுகிறது.
இந்நிலையில், திருவள்ளுவர் தினமான இன்று திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று கூறி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணியில் தங்கவேலனார் என்ற தமிழ் ஆர்வலர் ஒரு ரூபாய்க்கு டீ விற்று நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகிறார்.