பசும்பொன் தேவர் குருபூஜை: கமுதியில் மோப்ப நாய்கள் அணிவகுப்பு
கமுதி: முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை முன்னிட்டு அசாம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தடை செய்யப்பட்ட பொருட்களை கண்டறிவதற்காக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து போலீஸ் மோப்ப நாய்கள் ராமநாதபுரம் மாவட்டம் கொண்டுவரப்பட்டு அணிவகுப்பு நடத்தப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் ஆண்டுதோறும் அக்டோபர் 28, 29 மற்றும் 30-ந்தேதிகளில் முத்துராமலிங்கத்தேவரின் குருபூஜை நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் குருபூஜைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில் மாவட்டத்தில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகிறார்கள். ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குருபூஜைக்கு வருபவர்கள் சொந்த வாகனத்தில் வரவேண்டும், அதில் 3 பேருக்கு மேல் வரக்கூடாது. வாடகை வாகனங்களுக்கு அனுமதி கிடையாது. ஜோதி ஊர்வலம் நீண்ட தூரங்களில் இருந்து வரக்கூடாது என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை போலீசார் விதித்துள்ளனர்.
இதனை மீறி யாரேனும் தடை செய்யப்பட்ட பொருட்களை மாவட்டத்திற்குள் கொண்டு வந்துவிடக்கூடாது என்பதில் போலீசார் தீவிரமாக உள்ளனர். இதற்காக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள 16 மோப்ப நாய்கள் கமுதியில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டன.
கமுதி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன் தலைமையில் பஸ் நிலையத்தில் தொடங்கிய ஊர்வலம் மருதுபாண்டியர் சாலை, நாடார் பஜார், முஸ்லிம் பஜார், வெள்ளையாபுரம், செட்டியார்பஜார் என பல்வேறு வீதிகள் வழியாக சென்றது.
மோப்ப நாய்கள் கடை, கடையாக மோப்பம் பிடித்தப்படியே சென்றன. சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட பொருட்களை வைத்திருக்கக்கூடாது என பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை மீறி யாராவது தடை செய்யப்பட்ட பொருட்களை வைத்திருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் அறிவித்துள்ளனர். போலீசாரின் மோப்ப நாய் அணிவகுப்பு சோதனையால் கமுதியில் பரபரப்பு நிலவியது.