”ஆரத்தி எடு, கரன்சியை புடி” பணம் கொடுக்க கட்சிகளின் புது ”ஐடியா”
ஆலங்குடி: தேர்தலுக்கு பணம் கொடுக்க மட்டும் இந்த அரசியல்வாதிகளிக்கு எப்படித்தான் புதுப்புது "டெக்னிக்" எல்லாம் கிடைக்கிறது என்றே தெரியவில்லை.
இந்த மூளையை நாட்டின் முன்னேற்றத்திற்கு அவர்கள் ஒதுக்கி இருந்திருந்தால் நாடு எப்பொழுதோ வல்லரசாகி இருக்கும்.
இப்படித்தான் ஆலங்குடி பகுதியில் ஆரத்தி தட்டுகள் மூலம் புது யுக்தியில் பணம் சப்ளை செய்யப்படுகிறது.
பணம் கொடுக்க தடை:
வாக்காளர்களுக்கு பணம், அன்பளிப்பு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஆரத்தி தட்டில் பணம்:
ஓட்டுக்கு பணம் என்பதுபோல் வேட்பாளர்களுக்கு எடுக்கப்படும் ஆரத்தி தட்டுகளில் பணம் போடுவதும் குற்றமாகும். ஆனால், சிவகங்கை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆலங்குடி பகுதியில் தேர்தல் ஆணையத்தை ஏமாற்றி ஆரத்தி தட்டுகளுக்கு நூதன முறையில் பணம் சப்ளை செய்யப்படுகிறது. இந்த பகுதியில் வேட்பாளர் ஒருவர் ஓட்டு கேட்டு வருகிறார் என்றால் அப்பகுதி மக்கள் ஆரத்தி தட்டுகளுடன் கூடி விடுகின்றனர்.
நூதன முறையில் பட்டுவாடா:
எத்தனை ஆரத்தி எடுக்கப்படுகிறதோ அதை எண்ணிக்கொள்கிறார்கள். பின்னர் வேட்பாளர் சென்றவுடன் அந்த கட்சி பிரதிநிதி ஒருவர் தட்டுக்களுக்கு ஏற்ற பணத்தை உள்ளூர் கட்சி பிரமுகரிடம் கொடுக்கிறார்.
காலை, மாலை "கரன்சி":
அவர் பணத்தை ஆரத்தி எடுத்தவர்களுக்கு பிரித்து கொடுக்கிறார். இது ஒரு முறை என்றால் காலையில் வேட்பாளர் வந்தால் அதற்குரிய பணம் மாலையிலும் மாலையில் வேட்பாளர் வந்தால் அதற்குரிய பணம் இரவிலும் மற்றொரு முறையிலும் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. மேலும் பிரசாரம் நடந்து கொண்டிருக்கும் போதே தட்டுகளை எண்ணி வேட்பாளரின் பிரதிநிதி ஒருவர் உரிய பணத்தை அங்குள்ள உள்ளூர் பிரமுகரிடம் கொடுத்து விடுகிறார்.
கைகுலுக்கி கரன்சியை திணி:
கை குலுக்குவது போல் குலுக்கி பணத்தை திணித்து விடுகிறார். இந்த பணம் பின்னர் பட்டுவாடா செய்யப்படுகிறது. இப்படி பல வழிகளில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் கண்டுபிடிக்கவே முடியாத அளவுக்கு புதுப்புது டெக்னிக்குகளில் ஆரத்திகளுக்கு பணம் சப்ளை நடக்கிறது.
ஆணையத்தின் கண்ணில் "மிளகாய்ப்பொடி":
ரூ.50 முதல் ரூ.500 வரை கட்சிகளின் பலத்துக்கு ஏற்ப பணம் சப்ளை செய்யப்படுகிறது.வேட்பாளர் பிரசாரம் செய்யும் போது தேர்தல் ஆணைய அதிகாரிகள் உன்னிப்பாக கவனித்தும் தெரிவதில்லை.
வீடியோவுக்கே "டேக்கா":
வீடியோவில் பதிவு செய்தாலும் இந்த ஆரத்தி சமாசாரம் வெளியில் தெரிவதில்லை. இதனால் மற்ற பகுதிகளை காட்டிலும் ஆலங்குடியில் ஆரத்தி தட்டுகள் அதிகளவில் குவிகின்றன.