மோடி அறிவிப்பை பயன்படுத்தி ஏழைகள் வயிற்றில் அடிக்கும் மோசடி மன்னர்கள்! தடுக்குமா போலீஸ்?
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பை பயன்படுத்தி மோசடி மன்னர்கள் தமிழகத்தில் அதிகரித்துள்ளனர்.
சென்னை: மத்திய அரசின் திடீர் அறிவிப்பால், தமிழகத்தில் 'பணமாற்று' மோசடி பேர்வழிகள் அதிகரித்து வருகிறார்கள். இவர்களை போலீசார் கண்காணிக்க வேண்டியது அவசியம்.
கடந்த 8ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல், ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. இருப்பினும், பெட்ரோல் பங்க், மருத்துவமனை, மருந்தகங்கள், ரயில், பஸ் டிக்கெட் கவுன்டர்களில் பழைய ரூபாய் தாள்கள் செல்லுபடியாகும் என அரசு கூறியிருந்தது.
அதே நேரம், பெட்ரோல் பங்க் மற்றும் மருத்துவமனை நிர்வாகங்களுக்கு இந்த தகவல் உடனே சென்று சேரவில்லை. முன்கூட்டியே சொல்லாமல், அதிரடியாக அறிவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், இவ்வாறு அரசு செய்தது. ஆனால், சாமானியர்களுக்கு அது சங்கடமாகிவிட்டது.
பெட்ரோல் பங்குகளாக இருக்கட்டும், மருந்தகங்களாக இருக்கட்டும், ரூ.500க்கும் பொருள் வாங்கியே தீர வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றன. 500க்கும் பொருள் வாங்கிவிட்டு சாப்பாட்டுக்கு என்ன செய்வது என கேட்டனர் பழ ஏழை, எளிய மக்கள்.
"அனைவரும் சில்லரைக்காகவே பெட்ரோல் பங்க், மருந்தகங்கள் வருகிறார்கள், நாங்கள் சில்லரைக்கு எங்கு செல்வது.. எனவேதான் முழு தொகையையும் செலவிட வற்புறுத்துகிறோம்" என்கிறார் வர்த்தகர் ஒருவர்.
மருத்துவமனை நிலவரம் இன்னும் மோசம். பழைய ரூபாய் நோட்டுக்களை வாங்க மறுத்து கண் அறுவை சிகிச்சையையே தள்ளி வைத்த சம்பவம் நெல்லையில் நடந்தது. வேலூர் சிஎம்சி மருத்துவமனையிலும் இதே கதிதான்.
இதைத்தான் சில கும்பல் சட்ட விரோத செயல்களுக்கு பயன்படுத்தியது. உதாரமாக சிகிச்சைக்கு பணமின்றி தவிக்கும் ஏழைகளிடம் ரூ.500க்கு ரூ.100 கமிஷனாக எடுத்துக்கொண்டு ரூ.400 கொடுத்துள்ளது அந்த கும்பல். நேற்று ஏடிஎம்களும் திறக்கப்படவில்லை என்பதால், மருத்துவமனையில் சிகிச்சைக்காக தங்கியிருந்த பலரும் இந்த கும்பல்களிடம், தண்ட காசு அழுதுள்ளனர்.
இன்று ஏடிஎம்கள் திறக்கப்பட்டுள்ளபோதிலும், பணம் எடுக்கும் அளவு குறைக்கப்பட்டுள்ளதால், இன்னும் இந்த கொடுமை பல இடங்களில் தொடருகிறதாம். டெபிட் கார்டு இருந்து, அதில் ஓரளவுக்கு பணமும் இருக்கும் ஏழை, எளியவர்கள் மட்டுமே தப்பியுள்ளனர். (இப்போதெல்லாம் குறைந்த கூலி கொடுக்கும் நிறுவனங்களும் வங்கிகள் (டெபிட் கார்டுகள்) வழியாகவே சம்பளத்தை அளிப்பதால் ஏழைகளிடமும் டெபிட் கார்டுகள் அதிகம் புழங்குகிறது).
*புதுச்சேரியிலிருந்து சென்னை வரும் புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு குறிப்பிட்ட பெட்டியில் ரூபாய் நோட்டுக்களை மாற்ற ஒரு கும்பல் இயங்கியுள்ளது.
*சென்னை போரூர் சிக்னல் அருகே பழைய தாள்களுக்கு கமிஷன் அடிப்படையில் மாற்றித்தருகிறார்கள்
*வேலூர் சிஎம்சி உள்ளிட்ட பல மருத்துவமனைகளின் அருகே இதுபோன்ற கும்பல்கள் இயங்குகின்றன.
இப்படி மோசடி பேர்வழிகள் இப்போது திடீர் பணக்காரர்கள் ஆகிவருகிறார்கள். சட்டத்தின் சந்து பொந்துகளில் எல்லாம் தப்பியோட நம்மூர் கிரிமினல்களுக்கு சொல்லியா கொடுக்க வேண்டும்? இதை காவல்துறை தடுத்து, ஏழைகள் வயிற்றில் பால் வார்க்க வேண்டும் என்பதே பொதுமக்கள் கோரிக்கை.