பேரைச் சொன்னா சும்மா அதிரனும்! மாஜியின் அசைன்மெண்ட்: ஆஃப் பண்ணிய கரெண்ட் அமைச்சர்
சென்னை: ‘பேரைக்கேட்டா சும்மா அதிருதில்ல....' என்று சிவாஜி படத்தில் ரஜினி கூறும் வசனம் தமிழக ரசிகர்களிடையே பிரபலம். அதுபோல ஒரு சம்பவம் கரூரில் அதிமுக மாவட்ட செயல்வீரர்கள்கள் கூட்டத்தில் நடந்துள்ளது.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் எட்டுமாதமே இருப்பதால் ஆளும்கட்சியான அதிமுக அலார்டாக பணிகளை ஆரம்பித்துவிட்டது. பதவி பறிக்கப்பட்டு ஒருவாரத்திற்குள்ளாகவே அங்கேயிருந்தே செயல்வீரர்கள் கூட்டத்தை ஆரம்பியுங்கள் என்று சொன்ன தலைமையின் உத்தரவில் இருந்தே புரிந்து கொள்ளலாம் செந்தில் பாலாஜி மீது எந்த அளவிற்கு கோபம் என்பதை.
கரூர் மாவட்டப் பொறுப்பாளரும் அமைச்சருமான தங்கமணி நடத்திய இந்த கூட்டத்தில் ஐவர் அணி என்று அதிமுகவினரால் கூறப்படும் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன், ஆர்.வைத்திலிங்கம், எடப்பாடி கே.பழனிச்சாமி, பழனியப்பன் கலந்துகொண்டனர்.
பதவி போச்சே
கடந்த 4 வருடங்களாக அமைச்சராக வலம் வந்த செந்தில்பாலாஜி, மேடையில் அமர்ந்திருந்தாலும் பதவி பறிக்கப்பட்ட சோகம் முகத்தில் இருக்கத்தான் செய்தது. ஆனாலும் மேடையின் முன்புறம் அவரது ஆதரவாளர்கள்தான் ஆக்கிரமித்திருந்தார்கள். மேடையில், ‘செந்தில்பாலாஜி' என்று யார் பேசினாலும் கைதட்டி விசில் அடிக்க வேண்டும் என்பதுதான் இவர்களுக்குக் கொடுக்கப்பட்ட அசைன்மெண்ட்.
முதல்வர் ஜெயலலிதா பேரை அமைச்சர்கள் உச்சரிக்கும் போது அமைதியாக இருந்த செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்கள் வரிசையாக பொறுப்பாளர்கள் பெயரை குறிப்பிட்டு சொல்லிவிட்டு செந்தில் பாலாஜி எனக் குறிப்பிட்ட போதெல்லாம், கைத்தட்டி கலவரத்தை உண்டாக்கினார்கள். அதனால்தானோ என்னவோ அமைச்சர்கள் யாருக்கும் சால்வை போடக்கூட செந்தில் பாலாஜியை அனுமதிக்கவில்லை அமைச்சர் தங்கமணி.
அம்மாவின் வேட்பாளர்கள்
மேடையில் பேசிய செந்தில்பாலாஜியோ கரூர் மாவட்டம் அம்மாவின் மாவட்டம் என்பதை உணர்த்தும் வகையில் வருகின்ற 2016 தேர்தலில், எத்தனை இயக்கங்கள் எதிர்த்து நின்றாலும் எத்தனைபேர் நின்றாலும், அம்மா கைகாட்டும் வேட்பாளர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வோம் என்றார்.
உயிர் உள்ளவரை
கரூர் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களைக் கூடுதல் வாக்குகள் பெற்று வெற்றிபெற செய்வோம். என் உடம்பில் உயிர் உள்ள வரை உதிரம் உள்ள வரை அம்மாவுக்கு உண்மையாக இருப்பேன்'' என சென்டிமெண்ட் டச் கொடுத்து முடித்தார்.
அம்மாவுக்கு தெரியும்
செந்தில் பாலாஜியின் பாயிண்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய அமைச்சர் நத்தம் விஸ்வநாதனோ, அம்மா யாரை எப்போது பயன்படுத்த முடியும் என நினைக்கிறார்களோ அவர்களைத்தான் பயன்படுத்துவார்கள். விசுவாசமாக இருந்தால் மீண்டும் வாய்ப்பளித்து, தாயுள்ளத்தோடு பதவிகளை வழங்குவார் என்றார்.
புல்லாங்குழல் உதாரணம்
தொடர்ந்து பேசிய நத்தம் விஸ்வநாதன், புல்லாங்குழல் கலைஞனுக்கு எந்தத் துளையை எப்போது அடைத்தால் நல்ல இசை உருவாகும் என்பது தெரியும். அதேபோல் எந்த நேரத்தில் யாரை பயன்படுத்த வேண்டும் என அம்மாவுக்குத் தெரியும். விசுவாசத்தோடு பணியாற்றினால், சாதாரணமானவர்கள்கூட பொறுப்புக்கு வரமுடியும். இங்கு உறுப்பினர் முதல் எம்.எல்.ஏ வரை எல்லோரும் சமம்தான். மிகுந்த நம்பிக்கையோடு விசுவாசமாக இருங்கள், வாய்ப்புகள் காத்திருக்கின்றன என்று டச்சிங்குடன் முடித்தார்.
கரண்ட் ஷாக்
இது யாருக்கு புரிந்ததோ இல்லையோ செந்தில் பாலாஜிக்கு நன்றாக புரியவே கரண்ட் மினிஸ்டர் கொடுத்த ஷாக்கில் கொஞ்சம் ஆடித்தான் போனாராம். அப்புறம்? குடுத்த காசுக்கு மேல கூவுனவங்களுக்கு எல்லாம் வடிவேலு பாணியில் செட்டில் செய்து அனுப்பினாராம்.