உடுமலை காவல்நிலைய பலாத்கார வழக்கு: கைதான 3 போலீசாருக்கு 10 நாளில் ஜாமீன்- பொதுமக்கள் 'ஷாக்'
திருப்பூர்: உடுமலைப் பேட்டை காவல்நிலையத்தில் விசாரணை கைதியை பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்ட சப்.இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 3 போலீசாரை, நிபந்தனை ஜாமீனில் விடுவித்துள்ளது கோவை நீதிமன்றம். பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு 10 நாளில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட சம்பவம் திருப்பூர்
மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடுமலைப்பேட்டையைச் சேர்ந்தவர் லீலாவதி என்ற மூதாட்டி. இவரது கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சந்திரா என்ற பெண்ணை, விசாரணையின் போது அடித்து சித்ரவதை செய்ததோடு, பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் எழுந்த புகாரை அடுத்து, சென்னை உயர்நீதிமன்ற
உத்தரவின் அடிப்படையில் சி.பி.ஐ. இதுகுறித்து விசாரித்தது.
ஓராண்டுக்கு பின்னர் கடந்த 20-ம் தேதி இந்த வழக்கில் தொடர்புள்ளதாக போலீஸ் எஸ்.ஐ விஜயகுமார், போலீசார் ரங்கநாயகம், திலக் ஆகியோரை சி.பி.ஐ கைது செய்தது. மூவரும்
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், மூவருக்கும் ஜாமீன் வழங்க கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட 7 கடுமையான சட்டப்பிரிவுகளில் கைது செய்யப்பட்டதால், அவ்வளவு எளிதில் ஜாமீனில் வர முடியாது என சொல்லப்பட்டு வந்த நிலையில், ஜாமீன் மனு மீதான
விசாரணை இன்று காலை விசாரணைக்கு வந்தது. ஆனால், ஜாமீன் மனுவுக்கு சி.பி.ஐ எதிர்ப்பு தெரிவிக்காததால், எஸ்.ஐ உள்ளிட்ட 3 போலீசாருக்கும், தினமும் தலைமை குற்றவியல்
நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட கடுமையான சட்டப்பிரிவுகளில் கைது செய்யப்பட்ட மூன்று போலீசாருக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்துள்ள சம்பவம் திருப்பூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.