போதை பொருள் கடத்திய ஆட்டோவை சுட்டு பிடித்த சுங்கத்துறை- தூத்துக்குடியில் பரபரப்பு
போதைப்பொருள் கடத்திய ஆட்டோவை சுங்கத்துறை அதிகாரிகள் சுட்டுப் பிடித்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி: போதை பொருள் கடத்திய ஆட்டோ டிரைவரை போலீசார் சுட்டு பிடித்தனர். தப்பி ஓடிய கடத்தல்காரர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு போதை பொருள் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சுங்கத்துறை போதை பொருள் தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் ராஜா டேவிட் தலைமையில் தூத்துக்குடி தாளமுத்து நகரில் ராஜபாளையம் கடற்கரை பகுதியில் இரவு முதல் மாறுவேடத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் அதிகாலை 1 மணி அளவில் மோட்டை கோபுரம் அருகில் ஆட்டோவில் வந்து இறங்கிய நான்கு பேர் அதில் கொண்டு வந்த அட்டை பெட்டிகளை இறக்கினர். பின்னர் அருகில் கடலில் நிறுத்தப்பட்டிருந்த பைபர் படகில் ஏற்ற முயன்றனர்.
இதை பார்த்து சுங்க துறையினர் அவர்களை சுற்றி வளைக்க முயலும் போது ஆட்டோவில் வந்தவர்கள் தப்பியோட முயன்றனர். இதனால் உஷாரான சுங்க துறையினர் துப்பாக்கியால் வானை நோக்கி சுட்டு ஆட்டோவை ஓட்டி வந்த டிரைவரை மடக்கி பிடித்தனர்.
இருப்பினும் கூட வந்த மூன்று பேரும் தப்பி சென்றனர். இதையடுத்து ஆட்டோ டிரைவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் தூத்துக்குடி அண்ணா நகரை சேர்ந்த ரமேஷ் என்பது தெரிய வந்தது.
அட்டை பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 24 கிலோ எடையிலான போதை பொருட்கள் சோதனைக்காக ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த போதை பொருளை பெற்று கொள்வதற்கு இலங்கையிலிருந்து அதிவேக பைபர் படகு, முன்னரே வந்து கடலில் காத்திருந்தது.
அதிகாரிகளைக் கண்டதும் அவர்கள் மின்னல் வேகத்தில் படகை கடலில் ஓட்டி, கடத்தல்காரர்கள் மறைந்து விட்டனர். இதனையடுத்து கடலோர பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.