பிரியாணியில் எங்கடா லெக் பீஸ்... குடிபோதையில் கடைக்காரருக்கு அரிவாள் வெட்டு.. கடையடைப்பு!
மதுபோதையில் வந்த 4 பேர் பிரியாணி கடைக்காரரை அரிவாளால் வெட்டினர்.நெல்லை: நாட்டில் எது எதுக்கெல்லாம் அரிவாள் தூக்கணும்னு விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது. அப்படி ஒரு சம்பவம் இது.
Recommended Video
நெல்லை: நாட்டில் எது எதுக்கெல்லாம் அரிவாள் தூக்கணும்னு விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது. அப்படி ஒரு சம்பவம் இது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர் சுத்தமல்லி. இங்கு ஜாகீர் உசைன் என்பவர் பிரியாணி கடை நடத்தி வருகிறார். அவரது மனைவி பானு. இவர் கணவனுக்கு உதவியாக கடையில் இருப்பார். இந்த கடை பிரியாணி என்றாலே அங்கு மிகப் பிரபலமாம்.
இந்நிலையில் நேற்று பிற்பகல் ஒருவர் மதுபோதையில் வந்து தனது நண்பர்களுக்காக பிரியாணி வேண்டும் என்று கேட்டிருக்கிறார். ஆனால் உரிமையாளர் ஜாகீரோ, மதிய நேரம் முடிந்துவிட்டது. அதனால் சிக்கன் லெக் பீஸ் இல்லை, மற்ற சிக்கன் பீஸ்-களும் குறைவாக உள்ளது. தரட்டுமா என கேட்கிறார்.
எங்கடா லெக் பீஸ்?
அதற்கு அவர் சரி என்று சொல்லியிருக்கிறார். இதனை வாங்கி கொண்டு மது அருந்தி கொண்டிருந்த தனது 3 நண்பர்களிடம் கொடுத்தார். அவர்கள் பிரியாணி பொட்டலத்தை பிரித்து பார்த்துவிட்டு, "எங்கடா லெக் பீஸ், மத்த பீஸ்களும் கம்மியா இருக்கே?" என கேட்க, அந்த நபரும், கடைக்காரர் இப்படி சொல்லிதான் கொடுத்தான் என்றும், பீஸ் இல்லை என தெரிந்துதான், தான் வாங்கி வந்ததாகவும் கூறினார்.
அரிவாளால் வெட்டி சாய்ப்பு
ஆனால் இதனை நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. போதையில் இருந்தவர்களுக்கு தலையில் சுர்ரென்று ஏறியது. லெக் பீஸ் இல்லாததை அவர்களால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. ஆத்திரம் பொங்க அரிவாளை தூக்கி கொண்டு 4 பேரும் வெறியுடன் கடைக்கு வந்தனர். அங்கு கடையினுள் வேலை செய்து கொண்டிருந்த உரிமையாளர் ஜாகீர் மற்றும் மனைவியை கண்மண் தெரியாமல் அரிவாளால் வெட்டி சாய்த்துவிட்டனர். இதில் கணவன்-மனைவி இருவருமே படுகாயமடைந்து சுருண்டு விழுந்தனர்.
வியாபாரிகள் கடையடைப்பு
பட்டப்பகலில் நடந்த இந்த அக்கிரமத்தை கண்ட அவ்வழியாக சென்றவர்கள், அக்கம்பக்கத்து கடைக்காரர்கள் அனைவரும் தம்பதியை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தம்பதி மீது தாக்குதல் நடத்திய அந்த நபர்களை கொலை முயற்சி வழக்கில் செய்ய வேண்டும் என வலியுறுத்தி சுத்தமல்லி பகுதி முழுவதும் வியாபாரிகள் இன்று கடையை அடைத்து தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்தனர்.
நாடு எங்கே வல்லரசாவது?
நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் தலைக்குமேல் இருக்கிறது. எத்தனையோ பேர் ஒருவேளை சாப்பாடு இன்றி அவதிப்பட்டு வருகிறார்கள். மது அருந்திவிட்டால் இருந்தால் எதுவுமே கண்ணுக்கு தெரியாதா என்ன? அக்கிரமம் தலைக்கேறி கொழுப்பெடுத்து செய்யும் காரியங்களுக்கெல்லாம் மதுபோதை என பெயர் வைத்து கொள்வதா? கேவலம் சிக்கன் துண்டுகளுக்காக அரிவாள் எடுக்கும் கும்பல் இருக்கிறவரைக்கும் நாடு எங்கே எங்கிருந்து வல்லரசாவது?