நீங்க என்ன சிபிஐயா?.... ரிப்போர்ட்டரிடம் 'நிலைதடுமாறி' எகிறிய அமைச்சர் சி.வி. சண்முகம்
கேள்வி கேட்ட செய்தியாளரிடம் நீங்க என்ன சிபிஐயா என்று அமைச்சர் சிவி சண்முகம் 'நிலைதடுமாறி' கோபத்துடன் மீண்டும் மீண்டும் கேட்டார்.
சென்னை: தமிழக அமைச்சர்கள் பலர் மூத்த அமைச்சர் தங்கமணி வீட்டில் ஆலோசனை நடத்தினார். கட்சி ஒற்றுமைக்காகவும், சின்னத்தை மீட்பதற்காகவும் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. அப்போது டிடிவி தினகரன் பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு கோபத்தோடு பேசிய அமைச்சர் சி.வி. சண்முகம், நீங்க என்ன சிபிஐயா என்று பலமுறை கோபத்தோடு கேட்டார்.
அதிமுகவின் இரு அணிகளும் மீண்டும் இணையப் போவதாக தகவல் வெளியான நிலையில் அமைச்சர் தங்கமணி வீட்டில் மிக முக்கியமான ஆலோசனை நடைபெற்றது. ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது அமைச்சர் ஜெயக்குமார், ஆலோசனைக் கூட்டம் பற்றி விளக்கினார்.
தொடர்ந்து பேசிய சிவி சண்முகம், பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ஓபிஎஸ் கூறியுள்ளார். அதனை வரவேற்று நாங்கள் ஆலோசனை நடத்தினோம். எங்கள் துணை பொது செயலாளர் பெங்களூரு சென்றுள்ளார் என்றார்.
அப்போது ஒரு செய்தியாளர், டிடிவி தினகரன் பெங்களூருவில்தான் இருக்கிறாரா என்று கேட்டார், அதற்கு அவர், நீங்கள் தானே செய்தி போட்டிருக்கிறீர்கள் என்றார். டிடிவி தினகரன் கைதாவாரா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு கோபப்பட்ட சிவி சண்முகம், மிகவும் கோபத்துடனும் நிலைதடுமாறிய நிலையிலும் நீங்க என்ன சிபிஐ ஆ என்று திரும்ப திரும்ப கோபத்தோடு கேட்டார். அப்போது அருகில் இருந்த ஜெயக்குமார் அவரை சமாதானப்படுத்தினார்.
ஒருவழியாக சமாதானமான சிவி சண்முகம், நாங்கள் அண்ணன் தம்பிகள் ஒற்றுமையாக இருந்து கட்சியை காப்பாற்றுவோம், இரட்டை இலை சின்னத்தை மீட்போம் என்று கூறினார்.