அம்மா இல்லாம இந்த பிள்ளைங்க பேசுறதையெல்லாம் கேட்கவே முடியலைங்க!
தமிழக அமைச்சர்கள் வாய்க்கு வந்தமாதிரி தற்போது பேசி வருகிறார்கள்.
சென்னை: பொழுது விடிந்து பொழுது போனால், என்ன பேசுகிறோம் என்றே புரியாமல் எதையாவது பேசிவிட்டு போகிறார்கள் தமிழக அமைச்சர்கள். ஜெயலலிதா மறைந்ததலிருந்தே இப்படித்தான் நடந்து வருகிறது.
இதில் டாப்பில் உள்ளவர் அமைச்சர் செல்லூர் ராஜூ, அதற்கடுத்தாற்போல் இருப்பவர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். இப்போது லிஸ்ட் பெரிதாகி வருகிறது. "இன்று சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த், அதிமுக தொடங்கப்பட்ட போது சாதாரண பரட்டையாக இருந்தவர்" என அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சனம் செய்துள்ளார்
ரஜினி ஒரு பரட்டை
விழுப்புரத்தில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில், சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவர் பேசும்போது, "மறைந்த கருணாநிதிக்கு மெரினாவில் இடம் அளிக்கவில்லை என்றால், களத்தில் இறங்கிப் போராடி இருப்பேன் என்று ரஜினி சொன்னார், ஆனால் இன்று வேண்டுமானால் நடிகர் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக இருக்கலாம். ஆனால் அதிமுக தொடங்கிய காலத்தில் ரஜினி ஒரு சாதாரண பரட்டை என்று தெரிவித்திருக்கிறார்.
ரஜினி ஒரு பரட்டை
அதிமுக தொடங்கியபோது ரஜினி சாதாரண பரட்டை என்பது உண்மைதான். அது தமிழகமே கண்ட உண்மைதான். பரட்டை என்பது அவரது கதாபாத்திரம் அவ்வளவுதான். அப்படி பார்த்தால் அதிமுக தொடங்கிய சமயம் ரஜினி பரட்டை என்றால், தற்போதுள்ள அமைச்சர்கள் எல்லாம் அப்போது என்னவாக இருந்தார்கள்? ரஜினியின் பரட்டை காலகட்டத்திற்கே சென்று பார்த்தால்தானே, ஒவ்வொருவரும் எப்படி இருந்திருப்பார்கள் என்று தெரியும்.
டீ கடையில் மோடி
பிரதமர் மோடியே தான் பல முறை சொன்னதுபோல டீ கடையில் கூட வேலை பார்த்து இருந்திருக்கலாம். அல்லது அந்த வேலைகூட கிடைக்காமல் அவர் அந்த சமயங்களில் இருந்திருக்கலாம். அட இப்போதுள்ள துணை முதல்வரே கூட டீக்கடை உரிமையாளர்தானே.. இன்னும் கூட அந்த கடை இருக்கே. சமகாலத்தில் உள்ள ரஜினியை எதிர்ப்பதை விட்டுவிட்டு யாராவது 40 வருஷத்துக்கு முன்னாடி போய் விமர்சிப்பார்களா? அப்படி விமர்சிப்பதும் சரியா?
டாக்டர்கள் அட்வைஸ்
இதேபோல, சிவகங்கையில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில், கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் கலந்துகொண்டு பேசியுள்ளார். அப்போது "பெண்கள் கருவுற்ற சமயத்தில் டாக்டர்களிடம் போனால், அவர்கள் அதிக பளூ தூக்க கூடாது, நடக்க கூடாது என்று சொல்வார்கள், டாக்டர்களின் அட்வைஸ் கேட்டாலே ஆபரேஷன்தான். அதனால வீட்டிலேலேயே குனிந்து நிமிர்ந்து வேலை செய்யுங்கள் என்று சொல்லி இருக்கிறார்.
எல்லாமே வேஸ்ட்டா?
கர்ப்பிணிகளை வேலை செய்யுமாறு அறிவுறுத்துவது நல்ல விஷயம்தான். அதற்காக டாக்டர்கள் குறித்து தவறாக பேசினால், நாளை பிரசவத்தில் ஏதாவது பிரச்சனை, ஆபத்து என்றால் எங்கே போவது? யாரிடம் போவது? மாநில அரசிடம் சுகாதாரத்துறை என்று ஒரு துறையே உள்ளது. அந்த துறைக்கென்று ஒரு அமைச்சரும் உள்ளார். அந்த துறையில் லட்சக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் சொல்வதும், அறிவுறுத்துவதும் எல்லாமே வேஸ்ட்டா?
அம்மா இல்லாத பிள்ளைகள்
அமைச்சர் சண்முகம் பேசியது ரஜினி ரசிகர்களை சூடேற்றி உள்ளது. அதேபோல அமைச்சர் பாஸ்கரன் பேசியது மருத்துவர்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்மா இல்லாம இந்த பிள்ளைங்க பேசுறதையெல்லாம் கேட்கவே முடியலைங்க!