பேரறிவாளனின் பரோல் நீட்டிப்பு... இதுவரை அரசாணை வெளியிடப்படவில்லை - சி.வி. சண்முகம்
பேரறிவாளனின் பரோல் நீட்டிப்பு குறித்து இதுவரை அரசாணை ஏதும் வெளியிடப்படவில்லை என்று அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்தார்.
சென்னை: பேரறிவாளன் பரோல் நீட்டிப்பு குறித்து தமிழக அரசு இதுவரை எந்த அரசாணையும் வெளியிடவில்லை என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறை தண்டனை பெற்ற பேரறிவாளனின் உடல்நிலை சரியில்லை. இதேபோல் அவரது தந்தையின் உடல்நலமும் சரியில்லாததால் பேரறிவாளனுக்கு பரோல் வழங்க வேண்டும் என்று அவரது தாய் அற்புதம்மாள் அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் இதனை ஏற்ற தமிழக அரசு பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கியதை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி பரோல் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் வேலூர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
நாளையுடன் அவரது பரோல் காலம் முடிவடைய உள்ளது. பேரறிவாளனின்தா தந்தைக்கு மேலும் இரு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளவுள்ளதால் அவரது பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டித்து வழங்க தாயார் அற்புதம்மாள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்தார்.
அதன்படி பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டதாக ஏற்கெனவே தகவல் வெளியாகியது. இது குறித்து இதுவரை எந்த அரசாணையையும் தமிழக அரசு வெளியிடவில்லை என்று சி.வி.சண்முகம் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.