வினுப்பிரியா தற்கொலை- செல்போன் லஞ்சம் பெற்ற சைபர் கிரைம் ஏட்டு சஸ்பெண்ட்
சேலம்: இளம் பெண் வினுப்பிரியா தற்கொலை விவகாரத்தில் முக்கிய திருப்பமாக ஃபேஸ்புக்கில் ஆபாச பதிவை நீக்கவும், வழக்கை பதிவு செய்யவும் லஞ்சம் கேட்ட சைபர் கிரைம் பிரிவு தலைமை காவலர் சுரேஷ்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சேலத்தை அடுத்த இளம்பிள்ளை பகுதியைச் சேர்ந்த விசைத்தறி உரிமையாளர் அண்ணாதுரையின் மகள் வினுப்ரியா, 21. ஃபேஸ்புக்கில் அவரது படம் ஆபாசமாக வெளியிடப்பட்டது தொடர்பாக வினுப்ரியாவும், அவரது பெற்றோரும் மாவட்ட காவல் துறையிடம் புகார் செய்தனர். அதன் பேரில், சைபர் கிரைம் பிரிவு போலீசார் விசாரித்து வந்தனர். ஆனால், போலீசார், வினுப்ரியா மீதே சந்தேகம் தெரிவித்தும், அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் வகையில் விசாரணையை நடத்தியதாகத் தெரிகிறது.
வினுப்ரியாவின் தந்தை அண்ணாதுரையிடம் புதிய செல்போன் ஒன்றை வாங்கித் தரும்படி நிர்பந்தம் செய்ததையடுத்து, அண்ணாதுரை ரூ. 2 ஆயிரம் மதிப்பிலான சென்போன் ஒன்றை சைபர் கிரைம் ஏட்டு சுரேஷ்குமாருக்கு வாங்கிக் கொடுத்தார்.
இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை வினுப்ரியாவின் ஃபேஸ்புக்கிர் மீண்டும் ஓர் ஆபாச படம் வெளியிடப்பட்டதால், மிகுந்த மனவேதனை அடைந்த அவர் திங்கள்கிழமை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புகார் கொடுத்த பின்னர் வழக்குப் பதிவு செய்யாமலும், விசாரணையை முறையாக மேற்கொள்ளாமலும், ஃபேஸ்புக் பக்கத்தை முடக்காமலும் காலம் தாழ்த்தியதால்தான் வினுப்ரியா தற்கொலை செய்து கொண்தாக பெற்றோர்கள் குற்றம்சாட்டினர். தற்கொலைக்கு போலீசாரின் அலட்சியம்தான் காரணம் என்று குற்றம்சாட்டினார்.
வினுப்ரியாவின் பெற்றோர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் வா.சம்பத்தை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர்.
இந்த வழக்கை சேலம் சரக காவல் துறை டிஐஜி நாகராஜன் தலைமையில் விசாரணை மேற்கொள்ள ஆட்சியர் வா.சம்பத் பரிந்துரைத்தார்.
வினுப்ரியாவின் படத்தை ஆபாசமாகச் சித்திரித்து வெளியிட்ட நபரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். தற்கொலைக்குக் காரணமாக இருந்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி போராடினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அமித்குமார் சிங் நேரில் சென்று சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். காவலர்களின் பொறுப்பற்ற செயலுக்கு பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் மன்னிப்புக் கோரினார். இதையடுத்து, வினுப்ரியாவின் பெற்றோர் உடலைப் பெற்று கொள்வதாகத் தெரிவித்தனர்.
வினுப்ரியாவின் தற்கொலை வழக்கில் குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம். மரணத்துக்குத் தூண்டுதலாக இருந்த காவலர் மற்றும் செல்லிடப்பேசி பெற்றுக் கொண்ட காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமித்குமார் சிங் கூறினார்.
இதனிடையே, பிரேத பரிசோதனை முடிந்து வினுப்ரியாவின் உடலைப் பெற்றுக் கொண்ட அவரது பெற்றோர், சொந்த ஊரான இளம்பிள்ளைக்கு எடுத்துச் சென்று தகனம் செய்தனர்.
இந்நிலையில், வினுப்பிரியாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், செல்போன் லஞ்சம் வாங்கிய சைபர் கிரைம் தலைமை காவலர் சுரேஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து, சேலம் காவல் ஆணையர் சுமித் சரண் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், மற்றொரு காவலரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.