சைபர் கிரைம், பாலியல் பலாத்கார குற்றவாளிகள் இனி குண்டர் சட்டத்தில் கைது: சட்டம் அமல்
சென்னை: சைபர் குற்றங்கள் மற்றும் பாலியல் பலாத்கார குற்றவாளிகள் இனி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதற்கான சட்டம் நேற்றுமுதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
தமிழக சட்டசபையில் கடந்த கூட்டத் தொடரின்போது, பல சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வேட்டி போன்ற இந்திய பாரம்பரிய உடைகளை அணிந்து செல்லத் தடை செய்யும் தனியார் நடவடிக்கைகளை தடுக்கும் சட்ட மசோதா ஏக மனதாக நிறைவேறியது. இந்த சட்ட மசோதா சில வாரங்களுக்கு முன்பு சட்டமாக ஆகிவிட்டது.
சட்டசபையில் மற்ற பல மசோதாக்கள், குரல் வாக்கெடுப்பில் நிறைவேறின. இந்த சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் கே.ரோசய்யா தற்போது ஒப்புதல் அளித்துள்ளார்,
அந்த வகையில், பெண்கள்-குழந்தைகள் விடுதிகளுக்கான வழிகாட்டி நெறிமுறைகள், விளையாட்டு பல்கலைக்கழகத்தின் இணை வேந்தர் நியமனம், தமிழ்நாடு பாட நூல் கழகத்துக்குப் பதிலாக, தமிழ்நாடு பாட நூல்-கல்வி சேவைகள் கழகம் என்ற அமைப்பை உருவாக்குவது, இணையதள குற்றங்களைச் செய்வோரை குண்டர் சட்டத்தின் கீழ் அடைத்தல், தமிழகத்தில் தனியார் சட்டக் கல்லூரி தொடங்குவதை தடை செய்வது போன்ற சில முக்கிய சட்ட மசோதாக்கள், தற்போது சட்டமாக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளன. அவை அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன.