அரபிக்கடலில் உருவானது சாப்லா புயல்... வடகிழக்குப் பருவமழை 2 நாட்கள் நீடிக்கும்
சென்னை: வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை நீங்கினாலும், வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அரபிக் கடலில் உருவாகி உள்ள, 'சாப்லா' புயல், வளைகுடா நாடுகளை நோக்கி நகர்வதால் இந்திய பகுதிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் சாரல் மழையும் அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது. புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்துள்ளது.
தென் மாவட்டங்களில் மழை
கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி, திருநெல்வேலி மாவட்டம் ஆயக்குடியில் 8 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் 7 செ.மீ., திருநெல்வேலி மாவட்டம் தென்காசி, விருதுநகரில் 6 செ.மீ., மழை பெய்துள்ளது.
அணைப்பகுதிகளில் மழை
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை, பாபநாசம், சிவகிரி, கன்னியாகுமரி மாவட்டம் இரணியல், கோவை மாவட்டம் வால்பாறை ஆகிய இடங்களில் 5 செ.மீ., மழையும், விருதுநகர் மாவட்டம் சாத்தூர், தேனி மாவட்டம் அரண்மனைபுதூர், திருச்சி மாவட்டம் துவாக்குடி, கோவை மாவட்டம் பொள்ளாச்சி, திருவாரூர் மாவட்டம் குடவாசல், கன்னியாகுமரி மாவட்டம் கொளச்சல் ஆகிய இடங்களில் 4 செ.மீ. மழையும் நேற்று பதிவாகியுள்ளது. மழை காரணமாக, கோவை, குமரி மாவட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
மாமல்லபுரத்தில் பாதிப்பு
காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டை அடுத்த சர்வதேச சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில், வியாழக்கிழமை பெய்த பலத்த மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்சுணன் தபசு உள்ளிட்ட இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
2 நாட்களுக்கு மழை
வங்கக் கடலின் தென்மேற்குப் பகுதியில், இலங்கைக்கு அருகே, மூன்று நாட்களுக்கு மேலாக நிலை கொண்டிருந்த, காற்றழுத்த தாழ்வு நிலை நீங்கி விட்டது. ஆனாலும், காற்று மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டு உள்ளது. இதனால், புதுச்சேரியிலும், தமிழக கடலோர மாவட்டங்களிலும், இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறியுள்ளர்,
சாப்லா புயல்
அரபிக் கடலில் உருவாகி, ஏமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளை தாக்கும் புயலுக்கு, 'சாப்லா' என, பெயர் சூட்டியுள்ளனர். 'சாப்லா' என்றால், வங்க மொழியில், 'அமைதியின்மை' என, அர்த்தம்.
வங்கதேசம் பரிந்துரை
இந்திய பெருங்கடலில் உள்ள, இந்தியா, பாகிஸ்தாஸ், ஏமன், வங்கதேசம், தாய்லாந்து, மாலத் தீவு, மியான்மர், இலங்கை ஆகிய நாடுகள், புயலுக்கு பெயர் சூட்ட பரிந்துரை செய்கின்றன; இந்த பெயர்களே சூட்டப்பட்டு வருகின்றன. தற்போது உருவாகியுள்ள புயலுக்கு, வங்கதேசம் பரிந்துரைத்த, 'சாப்லா' என்ற பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை
வடகிழக்கு பருவ மழை காலத்தில் உருவாகியுள்ள, முதல் புயல் இது.இது மும்பை நகரத்திலிருந்து 1090 கி.மீ தூரத்திலும் ஓமன் நாட்டு சலாலா நகரத்திலிருந்து 1140 கி.மீ தூரத்திலும் நிலைக் கொண்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ரமணன் கூறியுள்ளார்.