ஓமனை நோக்கி நகர்ந்த புயலால் தமிழகத்துக்கு மழை 'கட்'
சென்னை: அரபிக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி ஓமனை நோக்கி நகர்வதால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது:
அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தீவிரம் அடைந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. அது தற்போது புயலாக மாறி அரபு நாடான ஓமனை நோக்கி நகர்ந்துகொண்டுள்ளது. இந்த புயலுக்கு நானக் என்று பெயர். குஜராத் மற்றும் கொங்கண் கடலோர பகுதிகளில் மணிக்கு 45 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும். அதே நேரம் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு கிடையாது. சென்னையில் ஒரு சில இடங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றார்.
தமிழகத்தில் நேற்று காலை வரையிலான நிலவரப்படி, அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, தேனி மாவட்டம் பெரியார் ஆகிய பகுதிகளில் 2 செ.மீ மழையும், கோவை மாவட்டம் வால்பாறை, சின்னக்கல்லார், கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், குழித்துறை பகுதிகளில் பரவலான மழையும் செய்துள்ளது.