ஹூட் ஹூட் பாதிப்பால் பஸ் கட்டணக் கொள்ளை: விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு ரூ.4500
சென்னை: புயலால் பாதிக்கப்பட்ட விசாகப்பட்டினத்தில் பஸ் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. சென்னைக்கு செல்ல ரூ.4,500 வசூலிக்கப்படுகிறது. விமானக்கட்டனத்தை விட அதிகமாக வசூலிக்கப்படுவதால் பயணிகள் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.
ஹூட் ஹூட் புயல் பாதிப்பால் விசாகப்பட்டினத்தை இணைக்கும் சாலை, ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
விசாகப்பட்டினத்தில் சீரமைப்பு பணிகள் முடிய இன்னும் ஒரு வாரம் ஆகலாம் என தெரிகிறது. தீபாவளிப் பண்டிகைக் காலம் நெருங்குவதால் விசாகப்பட்டினத்திலிருந்து வெளி மாநிலம் செல்லும் பயணிகள் வேறு வழியின்றி தனியார் பேருந்துகளை நாடுகின்றனர்.
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, தனியார் பஸ் உரிமையாளர்கள் விமானக் கட்டணத்தைவிட கூடுதலாக கட்டணம் வசூலிக்கின்றனர்.
விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு ஒருவருக்கு ரூ.4,500, பெங்களூருக்கு ரூ.5,500, ஹைதராபாத்துக்கு ரூ.4000 என பேருந்துக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் பயணிகள் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.