காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது: பள்ளிகள் விடுமுறை
சென்னை: குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து இன்று அதிகாலை வேதாரண்யம் இடையே கரையை கடந்தது இதன் காரணமாக கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுச்சேரி உள்ளிட்ட பல இடங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
இது குறித்து சென்னை வானிலை மண்டல ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வங்கக்கடலில் உருவான மாதி புயல் வடக்கு நோக்கி சென்று, பின்னர் வலுவிழந்து மீண்டும் தமிழகம் நோக்கி நகர்ந்து வந்துள்ளது. அது இப்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தில் இருந்து மேலும் வலுகுன்றி தாழ்வுப்பகுதியாக தென்மேற்கு வங்கக்கடலில் வேதாரண்யம் அருகே அது கரையை கடந்தது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று அநேக இடங்களில் மழை பெய்யும். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடலோர பகுதிகளில் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
வடக்கு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் தரைக்காற்றும் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும். இந்த வானிலை 14-ந்தேதி காலை வரை நீடிக்கும். அதன் பின்னர் படிப்படியாக மழை குறையும். இவ்வாறு வானிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கனமழை
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நேற்று புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம் உள்பட பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது. புதுவை துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
கடலூர், தஞ்சாவூர், திருவாரூர் போன்ற மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது. நாகை மாவட்டத்திலும் நேற்று பரவலாக மழை பெய்தது. கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. முத்துப்பேட்டையில் வீசிய சூறாவளிக் காற்றினால் மின் ஒயர்கள் அறுந்து விழுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
மீனவர் மரணம்
நாகையை அடுத்த சாமந்தான் பேட்டையை சேர்ந்த 4 பேர் ஒரு படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். வியாழக்கிழமை அதிகாலை 4 மணியளவில் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அலையின் சீற்றம் காரணமாக படகு கவிழ்ந்தது. இதனால் 4 பேரும் கடலில் குதித்து நீந்தினர். இதில் 3 பேர் மட்டுமே நீந்தி கரைக்கு வந்து சேர்ந்தனர். தவமணி (வயது40) என்பவர் இறந்தார்.சென்னை மற்றும் புறநகரில் நேற்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவில் லேசான மழை பெய்தது. பலத்த காற்றும் வீசியது. கடலூரில் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை. காரைக்கால், கோடியக்கரை மீனவர்களும் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை
பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது. ஆனால் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 அரையாண்டு பொதுத் தேர்வுகள் வழக்கம்போல நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல புதுச்சேரி, காரைக்கால் பகுதியிலும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.