கடலூர் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை - அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து
நாடா புயலினால் கனமழை பெய்து வருவதால் கடலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அண்ணாமலைப் பல்கலை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கடலூர் : நாடா புயல் எதிரொலியால் மழை பெய்து வருவதால் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் அறிவித்துள்ளார்.
தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள நாடா புயல் வலுவிழந்து புதுச்சேரிக்கு தென்கிழக்கே 210 கி.மீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக புயல் மையம் கொண்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடலூர் - வேதாரண்யம் இடையே நாளை அதிகாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். காற்று பலமாக வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் பாலச்சந்திரன் எச்சரித்துள்ளார்.
புயல் கூண்டு
மீன்வர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் கடலூர் துறைமுகத்தில் 7ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புதுச்சேரி துறைமுகத்தில் 6ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதேபோல் நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் சென்னை துறைமுகத்தில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
விடுமுறை - தேர்வு ரத்து
கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் அறிவித்துள்ளார். நாளை நடைபெற இருந்த சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கனமழை காரணமாக நாளைய தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.
சென்னையிலும் விடுமுறை
நாடா புயல் தாக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ள சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு நேற்றே இரண்டு தினங்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. திருவள்ளூவர் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.