தமிழகம், புதுவை கடற்கரையில் பலத்த காற்று வீசுகிறது..காரைக்கால் அருகே கரையை கடக்கிறது "நாடா புயல்"
வலுவிழந்த நிலையில் காரைக்கால் அருகே நாடா புயல் கரையைக் கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
புதுச்சேரி: காரைக்கால் அருகே வலுவிழந்த நிலையில் கரையைக் கடக்க துவங்கியது நாடா புயல். இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருந்த நாடா புயல் காரைக்கால் அருகே வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்க உள்ளது. காரைக்காலுக்கு கிழக்கு - தென் கிழக்கே நாடா புயல் மையம் கொண்டுள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது.
மேலும் காரைக்கால் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது. நாடா புயல் கரையை கடக்கும் போது தமிழகம் - புதுச்சேரி கடற்கரை பகுதியில் 40 முதல் 50 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என வானிலை மையம் கூறியுள்ளது.
இதையொட்டி, தமிழகம் மற்றும் கேரளாவில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் , அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், தீயணைப்பு துறையினர், காவல்துறையினர் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.