நெல்லையை சூறையாடிய ஓகி புயல்... தாமிரபரணியில் வெள்ளம் - மாஞ்சோலை மக்கள் அவதி
பயங்கர சூறைக்காற்றுடன் ஓகி புயல் தாக்கியதில் குமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்கள் முடங்கின.
திருநெல்வேலி: ஓகி புயலின் தாக்கத்தினால் தென் மாவட்டங்கள் முடங்கியுள்ளன. நெல்லை மாவட்டத்தில் காணும் இடமெங்கும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 2000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி அருகே நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஓகி புயலாக மாறியுள்ளது. இந்த ஓகி புயலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
வானிலை மையம் கணித்தது போலவே ஓகி புயலால் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. மழைக்கு இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நெல்லையில் பலத்த மழை
நெல்லை மாவட்டம் பாபநாசம், மணிமுத்தாறு அணையில் தலா 28 செ.மீ மழை அளவு பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தாமிரபரணியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
வீடுகளை சூழ்ந்த வெள்ளம்
நெல்லை மாவட்டம் பனகுடி அருகே புண்ணியவாளன்புரத்தில் உள்ள குடியிருப்பு வீடுகளில் 30க்கும் மேற்பட்ட வீடுகளில் காட்டாறு வெள்ளம் புகுந்தது. குடியிருப்புவாசிகள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கடல்போல காட்சி தரும் அணைகள்
பாபநாசம் அணை 129 அடியை எட்டியுள்ளது. மணிமுத்தாறு அணை 104 அடியாக உயர்ந்துள்ளது. கடையநல்லூர் அருகே உள்ள கருப்பாநதி அணை நிரம்பியது. இதனால் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே கால்வாய்களில் திறந்து விடப்பட்டுள்ளது. அதே போல் கொடுமுடியாறும் நிரம்பி வருவதால் அணை பாதுகாப்பு கருதி நம்பியாற்றில் 10 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. ஆற்றங்கரையோரம் தாழ்வான வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளன.
மரங்கள் சாய்ந்து சேதம்
தொடர் மழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை சுற்று வட்டார பகுதிகளில் சாலை ஓரங்களில் அமைந்துள்ள மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
2000 பேர் பாதிப்பு
அங்குள்ள 6 எஸ்டேட் மக்கள் எங்கும் செல்ல முடியாமல் மிகவும் அவதி அடைந்துள்ளனர் மற்றும் நேற்று இரவு ஏற்பட்ட மின்தடை இன்று மாலை 6 மணி வரைக்கும் சரி ஆகவில்லை இதனால் 2000 த்திற்க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு
கரைபுரண்டு ஓடும் வெள்ளம்
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக 2வது நாளாக குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மணிமுத்தாறு, பாபநாசம் அருவிகளிலும் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.