ஆக்ரோஷமாக சீறிப்பாயும் குற்றால அருவிகள்... கடும் வெள்ளப்பெருக்கு
குற்றாலத்தில் உள்ள அருவிகள் ஆக்ரோமாக பேரிரைச்சலோடு கொட்டி வருகின்றன. இதனால் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
Recommended Video
குற்றாலம்: மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்யும் மழையால் குற்றாலம் அருவிகளில் பெரும் இரைச்சலோடு ஆக்ரோசமாக அருவிகளில் தண்ணீர் கொட்டி வருகிறது.
குமரி அருகே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நேற்று அதிகாலை முதல் கனமழை பெய்தது. கடந்த ஓராண்டில் இல்லாத அளவிற்கு நேற்று மழையின் அளவு அதிகமாக இருந்தது.
ஓகி புயல் காரணமாக தென்காசி, குற்றாலம் பகுதியில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வந்தது.
குற்றாலம் அருவிகள்
விடாமல் கொட்டிய தொடர்மழை காரணமாக நேற்று காலை முதல் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. பிரதான அருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி தடாகத்தின் மீது தண்ணீர் கொட்டியது. அருவியின் சத்தம் பேரிரைச்சலாக இருந்தது. இதனால் குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் அருவியின் ஆக்ரோசத்தை அச்சத்தோடு பார்த்தனர்.
கரைபுரண்ட வெள்ளம்
மிக மெதுவாக தண்ணீர் விழக்கூடிய பழைய குற்றாலத்தில் படிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் அருவிக்கு அருகில் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. வெள்ளம் நீரில் உருண்டு புரண்டு விளையாடினர்.
தண்ணீரின் வேகம்
ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளில் சில பிரிவுகள் ஒன்றாக இணைந்து தண்ணீர் கொட்டியது. நிமிடத்திற்கு நிமிடம் தண்ணீரின் வேகம் அதிகரித்து வருகிறது. தண்ணீரின் நிறம் செம்மண் நிறமாக மாறத்துவங்கியதும் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.
செல்ஃபி மட்டுமே
அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டதால், வெளியூர்களில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகளும், ஐயப்ப பக்தர்களும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். பொங்கி பிரவாகமாக கொட்டும் அருவியை செல்போனில் பிடித்துச்செல்வோம் என்று நினைத்து பலரும் செல்ஃபி எடுத்தனர்.
ஆர்ப்பரிக்கும் வெள்ளம்
குற்றாலம் மெயினருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு சன்னதி பஜார் பகுதியில் உள்ள தற்காலிக கடைகளுக்குள் புகுந்தது. இதனையடுத்து மணல் மூட்டைகளை அடுக்கி தண்ணீரை ஆற்றுக்குள் திருப்பி விட்டனர். கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குற்றாலம் அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது.