ஓகி புயல்: கன்னியாகுமரியில் டிச.7வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
ஓகி புயல் பாதிப்பில் இருந்து விடுபடாத கன்னியாகுமரியில் பள்ளி, கல்லூரிக்கு 2 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கன்னியாகுமரி: ஓகி புயல் தாக்கத்தினால் கன்னியாகுமரி தண்ணீரில் மிதக்கிறது. புயலால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரியில் டிசம்பர் 5,6ஆம் தேதி 2 நாட்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓகி புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட பள்ளி , கல்லூரிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் ஓகி புயலால் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது. சூறைக்காற்றுடன் பெய்த மழையால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. 3000 ஆயிரம் மின்கம்பங்கள் சாய்ந்ததால் கடந்த 4 நாட்களாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இயற்கை எழில் சூழ்ந்த மாவட்டம்
ரப்பர் மரங்கள், வாழை, தென்னை மரங்கள் நிறைந்த மாவட்டம் கன்னியாகுமரி. ஆறுகள், அணைகள் நிறைந்த இந்த மாவட்டத்தை ஓகி புயல் சூறையாடிச் சென்றுள்ளது. ஆங்காங்கே முறிந்த மரங்களும், அறுந்து விழுந்த மின்கம்பிகளுமாக காட்சியளிக்கின்றன.
மீட்பு பணிகள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. கடற்படை உதவியுடன் பாதுகாப்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
உறவினர்கள் போராட்டம்
நீரோடி, முட்டம் ஆகிய கடற்கரை கிராமங்களில் கடலுக்கு மீன்பிடிக்க சென்று கரை திரும்பாத ஆயிரக்கணக்கான மீனவர்களை மீட்க வலியுறுத்தி மீனவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பள்ளி, கல்லூரிகளில் விடுமுறை
இதனிடையே புயலால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரியில் டிசம்பர் 5,6ஆம் தேதி 2 நாட்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஓகி புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட பள்ளி , கல்லூரிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.