அரபிக் கடலுக்கு ஷிப்ட்டான 'ஓகி' புயல்... அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்!
ஓகி புயல் தென்கிழக்கு அரபிக் கடலில் நிலவுவதாகவும் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் முழுவதும் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
சென்னை : ஓகி புயல் தென்கிழக்கு அரபிக் கடலில் நிலவுவதாகவும் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் முழுவதும் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஓகி புயலாக மாறியதையடுத்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக புயல் காற்றுடன் கனமழை பெய்தது. இந்நிலையில் ஓகி புயலானது தென்கிழக்கு அரபிக் கடலில் நிலவுவதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஒகி புயல் மற்றும் அடுத்த 24 மணி நேரத்திற்கான மழை நிலவரம் குறித்து சென்னை வானிலை மையம் இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார் . அப்போது அவர் தெரிவித்ததாவது, ஓகி புயல் கன்னியாகுமரியில் இருந்து நகர்ந்த லட்சத்தீவில் உஉன்ன அமிகித் தீவுக்கு தென்கிழக்கே 270 கி.மீட்டரில் மையம் கொண்டுள்ளது
மழை தொடரும்
புயல் வலுப்பெற்று வடமேற்குத் திசையில் லட்சத்தீவை கடந்து செல்லும். இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும். நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
தென்தமிழகம், குமரி பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படும். குமரி மற்றும் அரபிக் கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். ராமநாதபுரம், தூத்துக்குடியில் கடலுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அதிகபட்ச மழை பதிவு
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் 21 இடங்களில் கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் பாபநாசத்தில் 45 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக மணிமுத்தாறில் 38 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
சென்னை நிலவரம் எப்படி?
மயிலாடி 19 செ.மீட்டரும், தென்காசியில் 17 செ.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. தக்கலை, பேச்சிப்பாறை, கூடலூர், பூதப்பாடியில் 16 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. சென்னையை பொருத்த வரை 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னையில் அவ்வபோது கனமழை பெய்யக் கூடும் என்றும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.