புயல் பாதிப்பால் பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதியுதவி - முதல்வர் ஓபிஎஸ் அறிவிப்பு
புயல் பாதிப்பால் பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
சென்னை: வர்தா புயல் பாதிப்பினால் பலியான 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
சென்னையை புரட்டி போட்ட வர்தா புயலால் பல இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்துள்ளன. வீடுகள், அலுவலகங்கள், வாகனங்கள் மீதும் மரங்கள் விழுந்த பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. மின்கம்பங்கள் சாய்ந்து கிடப்பதால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இதனிடையே புயல் பாதித்த எண்ணுார், திருவெற்றியூர் ஆகிய பகுதிகளில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தலைமை செயலாளர் ராமமோகன ராவ் உள்ளிட்ட அரசு உயரதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு போர்வை, பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களை முதல்வர் வழங்கினார்.
புயல் மற்றும் மழையினால் நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில் 100 நடமாடும் மருத்துவ குழுக்கள் மற்றும் 50 தொற்று நோய் தடுப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. புயல் பாதித்த 3 மாவட்டங்களில் 6 அமைச்சர்கள் மேற்பார்வை செய்கின்றனர். 3 மாவட்டங்களில் 113 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன. ஒரு சில இடங்களில் மின் விநியோகம் சீரடைய ஓரிரு நாட்கள் ஆகும். மின் விநியோக சீரமைப்பு பணியில் 4 ஆயிரம் களப்பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கனமழையினால் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது.
இந்நிலையில், வர்தா புயல் மற்றும் பலத்த மழையினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். அதன்படி, பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.