புயல் எதிரொலி.. அண்ணா பல்கலைகழக தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைப்பு
அண்ணா பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: இன்று நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.
சென்னையை தாக்கிய வர்தா புயல் திங்கள்கிழமை பிற்பகலில் கரையைக் கடந்தது. புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு மூன்று நாட்களாக விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தன. புயல் கரையைக் கடக்கும் போது வீசிய பலத்த காற்றால் மின்கம்பங்கள் சேதமடைந்ததால், அவற்றை சரிசெய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். சாலைகளில் விழுந்துள்ள மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பள்ளி, கல்லூரிகளில் மின்சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், அண்ணா பல்கலைகழகம் சார்பில் இன்று நடைபெற உள்ள அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைகழக பதிவாளர் அறிவித்துள்ளார். மேலும் தேர்வுகளுக்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.