நாசக்காடாக்கிய வர்தா புயல்... இருளில் முடங்கியது இயல்பு வாழ்க்கை- தனித் தீவானது சென்னை!
சென்னையை 7 மணி நேரம் தாக்கிய வர்தா புயல் ஒட்டுமொத்த மாநகரை நாசக்காடாக்கிவிட்டது. சென்னை நகரில் 3-வது நாளாக இன்றும் மின்சாரம் விநியோகிக்கப்படாததால் இருளில் முடங்கிக் கிடக்கிறது இயல்பு வாழ்க்கை.
சென்னை: சென்னையில் இடைவிடாமல் 7 மணிநேரம் தொடர்ந்து தாக்கி கோரத்தாண்டவமாடிய வர்தா புயலால் ஒட்டுமொத்த நகரமே நாசக்காடாகிப் போனது. மின்சாரம் 3வது நாளாக விநியோகிக்கப்படாததால் சென்னை மாநகர மக்களின் இயல்பு வாழ்க்கை இருளில் முடங்கிக் கிடக்கிறது.
பேய்க்காற்று... பேரிரைச்சலுடனான பெருமழை... சென்னை மாநகரவாசிகள் வாழ்க்கையில் இதுவரை இப்படி ஒரு அச்சுறுத்தலை பார்த்தது இல்லை... சென்னையை சூறையாடிய வர்தா புயல் வரலாறு காணாத பெருத்த சேதத்தை ஏற்படுத்திவிட்டுப் போயுள்ளது.
வர்தா புயல் நேற்று முன்தினம் காலை தீவிரமடைந்து சென்னை நோக்கி நகர்ந்து வந்தது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வந்தது.
விடுமுறை
வர்தா புயலால் சென்னை, திருவள்ளூர். காஞ்சிபுரம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும், தனியார் நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள் உள்ளிட்டவைகளுக்கும் விடுமுறை அளிக்கும்படி தமிழக அரசு சுற்றிக்கை அனுப்பியது.
3 கட்டங்களாக...
வர்தா புயலானது நேற்று பிற்பகல் முதல் சென்னையில் 3 கட்டங்களாக கரையைக் கடந்தது. மொத்தம் 7 மணிநேரம் சென்னையை சின்னாபின்னமாக்கிவிட்டு சென்றது வர்தா புயல்.
ருத்ரதாண்டவம்...
இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் பேய்க்காற்றில் சிக்கி கீழே விழுந்து காயமடைந்தனர். சாலைகளில் திடீர் திடீரென மரங்கள், ராட்சத பேனர்கள், கடைகளின் முகப்பு போர்டுகள் சரிந்து விழுந்தன. கார்கள், பேருந்துகளை புரட்டிப் போட்டு ருத்ரதாண்டவமாடியது வர்தா.
போக்குவரத்து இல்லை
இதனால் உயிருக்கு அச்சப்பட்டு மக்கள் வெளியே வராமல் வீட்டில் முடங்கினர். ரயில் நிலையங்களின் மேற்கூரைகள் பறந்தன. ஒட்டுமொத்த ரயில் சேவையுமே முடக்கப்பட்டது. சென்னையில் விமான சேவையும் ரத்து செய்யப்பட்டு விமான நிலையம் இரவு முழுவதும் மூடப்பட்டது.
தனித்தீவானது
சென்னை நகரத்தில் நேற்று மட்டும் 3,000 மின்கம்பங்கள் கீழே விழுந்தன. தொலைத் தொடர்பு சேவையும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் சென்னை பெருநகரம் ஒரு தனித்தீவாகிப் போய்விட்டதுதான் சோகம்.
தொடரும் மீட்பு பணிகள்
சென்னை நகரில் நேற்று புயல் கரையை கடந்த நிலையில் தொடர்ந்தும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்தன. இருப்பினும் சென்னை மாநகரம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப இன்னும் சில நாட்களாகும் என்றே தெரிகிறது.