சென்னையில் 4000 மின் கம்பங்கள் சரிந்தன.. இன்று மாலைக்குள் மின்சார சப்ளை: அமைச்சர் தங்கமணி உறுதி
சென்னையில், மாலைக்குள் மின் வினியோகம் சீரமைக்கப்படும் என அமைச்சர் தங்கமணி உறுதியளித்தார்.
சென்னை: தமிழக தலைநகர் சென்னையை நேற்று மாலை கடந்த வர்தா புயலால் நகரமே சின்னாபின்னமாகிவிட்டது. காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் புயலின் தாக்கம் இருந்தது.
காற்றும், மழையும் அம்மாவட்டங்களிலும் பலமாக இருந்தது. எனவே சென்னை உட்பட புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது.
பலத்த காற்று வீசியபோது மரங்கள் மட்டுமின்றி, மின்கம்பங்களும் விழுந்தன. எனவே சென்னையில் மின்சார இணைப்பை இரவுக்குள் திருப்பி தர முடியவில்லை. பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கின.
இந்நிலையில், இன்று மாலைக்குள் சென்னையில் மின்சார சப்ளை மீண்டும் வழங்கப்படும் என்று அத்துறை அமைச்சர் தங்கமணி தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இன்று தெரிவித்தார்.
சென்னை மற்றும் புறநகரில் சுமார் 4000 மின்கம்பங்கள் விழுந்துள்ளதாகவும், 125 தெருவிளக்கு கம்பங்கள் வீழ்ந்துள்ளதாகவும், மின் கம்பங்களையும், மரங்களையும் அகற்றும் பணி முடிந்ததும் மின் விநியோகம் விரைவில் சீரமைக்கப்படும் என்றும் தங்கமணி தெரிவித்தார். வருவாய்த்துறை செயலாளர் சந்திரமோகனும் அதை தெளிவுபடுத்தினார். 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்துள்ளதாக அவர் தெரிவித்தார். சென்னையில், புயல் சேத மீட்பு பணிகளை 6 அமைச்சர்கள் மேற்பார்வையிடுவதாகவும், மாலைக்குள் மின் வினியோகம் சீரமைக்கப்படும் என தங்கமணி உறுதியளித்தார்.