அரபிக்கடலில் சங்கமமான வர்தா... அந்தமான் அருகே புதிய காற்றழுத்தம் உருவானது- வானிலை மையம்
வங்க கடலில் அந்தமான் அருகே புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை: வங்க கடலில் உருவான வார்தா புயல் கடந்த 12ம் தேதி சென்னையில் கரையை கடந்தது. அப்போது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.
காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட மரங்களும், பல்லாயிரக்கணக்கான மின் கம்பங்களும் சாய்ந்தன. கடந்த 6 நாட்களுக்கும் மேலாக சென்னை,
புறநகர் பகுதிகளில் மின்சாரம் இன்றி மக்கள் தவித்து வருகின்றனர்.
பெரும் சேதத்தை ஏற்படுத்திய வார்தா புயல் மேற்கு நோக்கி நகர்ந்து, படிப்படியாக வலு இழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி அரபிக்கடலில் லட்சத்தீவு பகுதியில் தற்போது நிலைகொண்டு உள்ளது.
இந்த நிலையில், வங்க கடலில் தெற்கு அந்தமானையொட்டிய கடல் பகுதியில் புதிதாக ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி இருக்கிறது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள்,கரையை கடந்த வார்தா புயல் வலு இழந்து லட்சத்தீவு மற்றும் அரபிக்கடல் பகுதியில் நிலைகொண்டு உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சனிக்கிழமை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும்.
இதற்கிடையே, வங்க கடலில் தெற்கு அந்தமானையொட்டிய பகுதியில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருக்கிறது. இது மிக மிக தொடக்க நிலைதான்.
இப்போது உள்ள நிலையை வைத்து அது எந்த திசையை நோக்கி நகரும் என்று கூற இயலாது.மேலும் அரபிக்கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி, குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி தமிழகத்தை நோக்கி வர வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
வட கிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து இதுவரை 3 புயல்கள் வந்தும் சென்னையில் 54 சதவீதம் குறைவாகவே மழை பெய்துள்ளது. இந்நிலையில் அந்தமான் அருகே
மேலும் ஒரு காற்றழுத்தம் உருவாகியுள்ளது.அக்டோபர் 30ல் பருவமழை தொடங்கியது. ஆனாலும், நவம்பர் மாதத்தில் சென்னையில் போதிய அளவு மழை பெய்யவில்லை.
கியாண்ட், நடா புயலிலும் தமிழகத்துக்கு சரிவர மழை கிடைக்கவில்லை. வர்தா புயல் 12ம் தேதி சென்னையை நேரடியாக தாக்கியது. இதையடுத்து சென்னையில் 119 மிமீ மழை பெய்தது. எனினும் சென்னை நகரில் இந்த பருவத்தில் பெய்ய வேண்டிய இயல்பான மழை பெய்யவில்லை.இதுவரை 877 மிமீ மழை பெய்திருக்க வேண்டிய நிலையில் சென்னையில் இதுவரை 403 மிமீ மழை அளவே பெய்துள்ளது. இது 54 சதவீதம் குறைவு.
வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் சில இடங்களில மழை பெய்து வருகிறது.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் 3 செ.மீ. மழையும், மரக்காணம், மயிலத்தில் தலா 1 செ.மீ. மழையும் பெய்து உள்ளது.அந்தமான் அருகே உருவாகியுள்ள காற்றழுத்தம் மேலும் வலுப்பெற்று வடக்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து தமிழக கடலோரப் பகுதிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.