வர்தா புயலால் கனமழை- சென்னை, காஞ்சி, உள்ளிட்ட 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
வர்தா புயலில் தாக்கத்தால் கனமழை கொட்டி வருவதை முன்னிட்டு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: வர்தா புயல் இன்று கரையை கடக்க உள்ள நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
சென்னை, ராயபுரம், தண்டையார்பேட்டை, புதுவண்ணார்பேட்டையில் மிதமான மழை பெய்து வருகிறது. பட்டினபபாக்கம், எம்.ஆர்.சி.நகர், காமராஜர் சாலை, அண்ணாசாலை, நந்தனம், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், தி.நகர், சைதாப்பேட்டை, கிண்டி, பல்லாவரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி, பொன்னேரி, பள்ளிப்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் பழவேற்காடு, ஊத்துக்கோட்டை, செங்குன்றத்தில் இடைவிடாது மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுராந்தகம், கல்பாக்கம், மாமல்லபுரத்தில் மிதமான மழை பெய்து வருகிறது. திருவள்ளூரின் பழவேற்காட்டில் பலத்த கடற்காற்று. மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்து மின்சாரம் துண்டிப்பு.
வானிலை எச்சரிக்கை
வர்தா புயல் இன்று பிற்பகலில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். மணிக்கு 11 வேகத்தில் வர்தா புயல் கரையை கடந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சென்னைக்கு கிழக்கே 180 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது என்று பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் 20 செ.மீ. அளவிற்கு மழை பெய்யும் என்றும் பாலச்சந்திரன் எச்சரித்துள்ளார்.
பலத்த காற்று வீசும்
வர்தா புயல் கரையை கடந்த பின்பும் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வர்தா புயல் கரையை கடக்கும் காற்று 80 முதல் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என தகவல் தெரிவித்துள்ளது. கடல் சீற்றத்துடனும், கடல் அலைகள் 1 மீட்டர் உயரத்திற்கு எழக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மற்றும் பாண்டிச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடலூர், வேலூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் விடுமுறை
விழுப்புரம் மாவட்டத்தில் 2 தாலுக்காவில் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வானூர், மரக்காணம் ஆகிய 2 தாலுக்காவிலும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மரக்காணத்தில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை.
தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை
வர்தா புயலை முன்னிட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் தனியார் நிறுவனங்களுக்கு திங்கட்கிழமை விடுமுறை அளிக்கவோ அல்லது வீட்டில் இருந்து பணி செய்யவோ அனுமதிக்க வேண்டும். மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் கடலோர பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கும் இது பொருந்தும் என்று அறிவுறுத்தியதை அடுத்து பல தனியால் நிறுவனங்கள் விடுமுறை அறிவித்துள்ளன.