வர்தா புயல் வலுவிழந்து டிச.12ல் கரையை கடக்கும்- தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை
வங்கக் கடலில் வர்தா புயல் வலுவிழந்த நிலையில் கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
சென்னை: தென் கிழக்கு வங்கக் கடலில், விசாகப்பட்டினத்திலிருந்து 1,210 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி, பின்னர் புயலாக மாறும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலை 5.30 மணி நிலவரப்படி, தென் கிழக்கு வங்கக் கடலில், விசாகப்பட்டினத்திலிருந்து 1,060 கிலோ மீட்டர் தூரத்தில் வர்தா புயல் மையம் கொண்டிருப்பதாக, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் நேற்று தகவல் வெளியிட்டது.
இந்தப் புயல் மேலும் வடமேற்கு திசையை நோக்கி நகர்வதால், கடும் புயலாக மாறி, அடுத்த 4 நாட்களுக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. வர்தா புயல் டிசம்பர் 12ம் தேதி நெல்லூருக்கும் காக்கி நாடாவிற்கும் இடையே கரையைக் கடக்கும் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் விசாகப்பட்டினம் அருகே மையம் கொண்டுள்ள வர்தா புயல் வலுவிழந்த நிலையில் 12ம் தேதி கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைபெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார். 12ஆம் தேதி வர்தா புயல் கரையை கடக்கும் காற்று பலமாக வீசக்கூடும் என்பதால் தமிழக மீனவர்கள் யாரும் ஆந்திரா கடலோரம் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார்.
இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை இயல்பை விட 66 சதவிகிதம் குறைவாக பெய்துள்ளதாகவும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்தார்.