கம்யூ. மூத்த தலைவர் தா.பாண்டியன் மருத்துவமனையில் மீண்டும் அனுமதி
மூச்சு திணறல் காரணமாக மீண்டும் தா.பாண்டியன் அனுமதிக்கப்பட்டார்.
Recommended Video
சென்னை: மூச்சு திணறல் பிரச்சனை காரணமாக தா.பாண்டியன் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், அக்கட்சியின் முன்னாள் மாநில செயலாளருமான தா.பாண்டியனுக்கு 85 வயதாகிறது. சமீப காலமாக சிறுநீரக பிரச்சினைக்காக இவர் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்தசில தினங்களுக்கு முன்பு தா.பாண்டியனுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து, உடனடியாக அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து தா.பாண்டியனுக்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்தனர்.
அப்போது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தா.பாண்டியனை முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் அரசு மருத்துவமனைக்குச் சென்று தா.பாண்டியனை நேரில் சந்தித்து, உடல்நலம் குறித்து விசாரித்துவிட்டு வந்தனர். இதையடுத்து இரண்டு தினங்களில் தா.பாண்டியனும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
இந்நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் தா.பாண்டியனுக்கு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மேலும் சிறுநீர் பிரச்சினையும் சேர்ந்து கொண்டதால், உடனடியாக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர மருத்துவ சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். தற்போது தா.பாண்டியனுக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.