பிரதமராகும் வாய்ப்பை எட்டி உதைச்சுட்டீங்களே.. ஜெ. குறித்து தா.பாண்டியன் கவலை
தூத்துக்குடி: நாட்டின் பிரதமராகும் வாய்ப்பை தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலருமான ஜெயலலிதா எட்டி உதைத்துவிட்டதாக அவரது பெயரைக் குறிப்பிடாமல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன் சாடியுள்ளார்.
தூத்துக்குடி லோக்சபா தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் அ.மோகன்ராஜ் வேட்புமனுத் தாக்கல் செய்தபோது தா.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 9 தொகுதிகளில் போட்டியிடுகிறோம். அனைத்து இடங்களிலும் மகத்தான வரவேற்பு உள்ளது.
காங்கிரஸ் கட்சி தன் நம்பிக் கையையும், மக்கள் நம்பிக்கை யையும் இழந்துவிட்டது. அந்த இடத்தை நிரப்பி, ஆட்சி சாவியை பறிக்க கோட்சே பாரம்பரியத்தினர் துடிக்கின்றனர்.
தமிழர் நலனை பேசி வரும் சில கட்சியினர் தமிழருக்கும், தமிழகத்துக்கும் எதிராக வகுப்புவாத வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் வந்த வழியை மறந்துவிட்டார்கள்.
இந்தியாவின் தலைமை பொறுப்பை ஏற்கும், நாட்டை ஆளும் வாய்ப்பு ஒரு தமிழருக்கு கிடைத்தது. அதனை எட்டி உதைத்துவிட்டனர். தேர்தல் முடிவு வரும்போது அவர்களுக்கு இது தெரியும்.
40 தொகுதி என்ன, 400 தொகுதிகளில் ஜெயிப்போம் என்றுகூட கூறலாம். ஆனால் மே 16-ந் தேதி தேர்தல் ஆணையம்தான் இதனைச் சொல்லும்.
இவ்வாறு தா. பாண்டியன் கூறினார்.
அதிமுக கூட்டணியில் இருந்து இடதுசாரிகளைக் கழற்றிவிட்டதால் ஜெயலலிதா மீதான கோபம் இன்னும் குறையவில்லை போலும் தா.பா.வுக்கு!