சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகத்துக்கு 3 ஆண்டு சிறை
வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் அரங்கநாயகத்துக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகத்துக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த 1991-96-ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் கல்வித் துறை அமைச்சராக இருந்தவர் அரங்கநாயகம். இவரது பதவிக் காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.15 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்தது. அவரது மனைவி மற்றும் 2 மகன்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கானது சிறப்பு நீதிமன்ற நீதிபதி கோமதி நாயகம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வருமானத்துக்கு அதிகமாக அரங்கநாயகம் சொத்து சேர்த்தது ஊர்ஜிதமானதால் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கில் இருந்து அவரது மனைவி மற்றும் 2 மகன்கள் விடுவிக்கப்பட்டனர்.
அவருக்கு ஜாமீன் வழங்க அனுமதி உள்ளதால் அவர் இந்த தண்டனை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வாய்பபிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கில் சுமார் 21 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.