ஓபிஎஸ் மீதான சொத்து குவிப்பு புகார்.. லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவு
ஓபிஎஸ் மீதான சொத்துக்குவிப்பு புகார் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவு
சென்னை: ஓபிஎஸ் மீதான சொத்துக் குவிப்பு புகார் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறையிடம் அளித்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்ச் 10-ஆம் தேதி திமுக வலியுறுத்தியது.
இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் இல்லாததால் ஓபிஎஸ்ஸிடம் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி ஆர் எஸ் பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
சகோதரர்கள்
இந்த மனுவில் பாரதி கூறுகையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவரது மனைவி விஜயலட்சுமி, மகன்கள் ரவீந்திரநாத், ஜெயபிரதீப், மகள் கவிதாபானு மற்றும் சகோதரர்கள் பெயரில் சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளார்.
சேகர் ரெட்டி டைரி
வருமானம் குறித்த தவறான தகவல்களை தேர்தல் வேட்புமனுக்களில் கொடுத்துள்ளார். தேனி மாவட்ட போஜராஜன் மில்ஸ் நிறுவனத்துக்கு 99 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட 140 கோடி ரூபாய் நிலத்தை சந்தை விலைக்கு குறைவாக கொடுத்து வாங்கியுள்ளார் என்றும் சேகர் ரெட்டியின் பெயர் ஓபிஎஸ் டைரியில் குறித்து வைக்கப்பட்டது என்பன உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
விசாரணை
இந்த வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான குற்றவியல் தலைமை வழக்கறிஞர், ஆர்.எஸ்.பாரதியின் புகார் மனு தலைமைச்செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதி ஜெயச்சந்திரன், புகார் மனுவை அனுப்பி வைத்தால் மட்டும் போதுமா? விசாரணை நடத்த வேண்டாமா? என்று கேள்வி எழுப்பினார்.
ஆர் எஸ் பாரதி
3 மாதங்களாக ஏன் விசாரணை நடத்தவில்லை? சேகர் ரெட்டியின் டைரியில் ஓபிஎஸ் பெயரும் உள்ளதாக ஆர்.எஸ்.பாரதி மனுவில் குறிப்பிட்டுள்ளதால் வழக்கை சிபிஐ விசாரணை நடத்த ஏன் உத்தரவிடக்கூடாது? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். ஒபிஎஸ் மீதான புகார் மனுவை சிபிஐக்கும் அளிக்க ஆர்.எஸ்.பாரதிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
வழக்கு முடித்து வைப்பு
இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு பதில் அளிக்கையில் லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக பதில் அளித்திருந்தது. இதையடுத்து விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என்று கூறிய நீதிபதி இந்த வழக்கை முடித்து வைத்தார்.