சசிகலாவைப் பற்றி நிறைய தெரியும்.. இளவரசியைப் பற்றியும் கொஞ்சம் தெரிஞ்சிக்குங்க!
சொத்துக்குவிப்பு வழக்கில் 4வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு தண்டனை பெற்றுள்ள இளவரசி, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் அண்ணன் மனைவியாவார்.
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடன் போயஸ் தோட்ட இல்லத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த இளவரசி சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு தண்டனை பெற்றுள்ளார். அவருக்கு 4 சிறை தண்டனையும், ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இவர் சசிகலாவின் அண்ணன் மனைவியாவார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டள்ள முதல்வர் ஜெயலலிதா தவிர சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் ரத்த சொந்தங்கள். போயஸ்கார்டனுக்குள் இளவரசி வந்தது ஒரு சோகமான நிகழ்வினால்தான்.
சசிகலாவின் அண்ணி
சொத்துக்குவிப்பு வழக்கின் 4வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள இளவரசி 2வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள சசிகலாவின் சகோதரர் ஜெயராமனின் மனைவி. ஜெயலலிதாவுக்குச் சொந்தமான, ஆந்திராவில் உள்ள திராட்சை தோட்டத்தில் மின்சாரம் தாக்கி இறந்துவிட்டார் ஜெயராமன். கணவர் இறந்த பிறகு ஜெயலலிதாவின் சொந்த வீடான வேதா நிலையத்திற்கு தனது குழந்தைகள் கிருஷ்ணபிரியா, ஷகிலா, விவேக் ஆகியோருடன் குடியேறினார்.
சென்டிமென்ட்
ஜெயராமன் இறக்கும் போது அவரது இளம் மனைவியையும் மூன்று குழந்தைகளையும் விட்டுவிட்டுப் போனார். இளவரசி மீது ஜெயலலிதா பிரியமாக இருந்தார், அவரது குழந்தைகளையும் பாசத்துடன் பாத்துக்கொண்டார். இளவரசியை கார்டனுக்கு அழைத்து வந்து உரிய பாதுகாப்பையும் மரியாதையையும் வழங்கியவர் சசிகலாதான் என்றாலும் காலப் போக்கில் சசிகலா, இளவரசி ஆகிய இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாம்.
மருமகன் ராஜராஜன்
போயஸ் கார்டனிலேயே வளர்ந்த இளவரசியின் இரண்டாவது மகள் சகீலாவை 2001ம் ஆண்டு சமயபுரம் கோயிலில் வைத்து திருமணம் செய்துகொண்டவர் ராஜராஜன். திருமணம் முடித்த கையோடு சிங்கப்பூர் சென்று தொழில் செய்து வந்த ராஜராஜன், சில ஆண்டுகளுக்கு முன்புதான் சென்னைக்குத் திரும்பினார். ஸ்ரீரங்கம் தொகுதியில் ஓடியாடி வேலை செய்த நேரத்தில் கட்சியினருக்கு அறிமுகம்.
வேதா நிலையத்தில் தங்கிய இளவரசி
மூன்றாவது முறையாக ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் கட்சியில் இருந்தும் போயஸ்கார்டனில் இருந்தும் சசிகலாவும் சொந்த பந்தங்கள் அனைவருமே நீக்கப்பட்டார்கள். இளவரசியின் மருமகன் ராஜராஜனும் இளவரசியின் சம்பந்தி கலியபெருமாளும் விரட்டப்பட்டனர். ஆனால் இளவரசி மட்டும் வேதா நிலையத்திலேயே தங்கி இருந்தார்.
மன்னார்குடி குடும்பம்
போயஸ்கார்டனில் முதலில் சசிகலாவின் தம்பி திவாகரன், அதன்பிறகு சசிகலாவின் அக்கா வனிதாமணியின் மகன்கள் தினகரன், பாஸ்கரன், சுதாகரன் வந்தார்கள். சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனன், அவரது மகன் டாக்டர் வெங்கடேஷ் வந்தார்கள். சசிகலாவின் அண்ணன் விநோதகனின் மகன்களான மகாதேவனும் தங்கமணியும் அடுத்து வந்தார்கள். இவர்களில் ஒவ்வொருவர்களாக பின்னர் கல்தா கொடுக்கப்பட்டனர். அப்போது சசிகலா அமைதியாகத்தான் இருந்தார். அவரால் எந்த தடையும் போட முடியவில்லை. காரணம், சசிகலாவை மீறி ஜெயலலிதாவிடம் போட்டுக் கொடுப்பதற்கு சக்தி வாய்ந்த நபராக செயல்பட்டாராம் இளவரசி.
இளவரசியின் சக்தி
இளவரசிக்கு வடுகநாதன், கண்ணதாசன், அண்ணாதுரை ஆகிய மூன்று சகோதரர்கள். தஞ்சை அருகில் உள்ள கோட்டூர் பஞ்சாயத்து சேர்மன் பதவியில் இருக்கிறார் இந்த அண்ணாதுரை. இப்படி தனது குடும்ப ஆட்களை அதிகார மையங்களுக்குள் கொண்டு வந்தாராம் இளவரசி. சசிகலா, நடராஜன், இளவரசி ஆகிய முப்படைகளுக்கு மத்தியில் நடந்த தணியாத சண்டையில் மூன்று பக்கமும் இருந்த முக்கியமான அனைவரும் வீழ்த்தப்பட்டார்கள். அதில் இளவரசி மட்டும் தப்பித்தார் அந்த அளவிற்கு நம்பிக்கைக்கு உரியவராக திகழ்ந்தார் இளவரசி.
விவேக் ஜெயராமன்
இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன் போயஸ் தோட்டத்திலேயே வளர்ந்த செல்லப்பிள்ளை. கோவையில் உள்ள சின்மயா மிஷன் சர்வதேசப் பள்ளியில் ப்ளஸ் டூ வரை படித்தார் விவேக். 2013ம் ஆண்டு எம்.பி.ஏ மார்க் கெட்டிங் முடித்த விவேக், படிப்பை முடித்ததும் பெங்களூருவில் உள்ள சாம்சங் நிறுவனத்தில் ரீஜினல் மார்க்கெட்டிங் கோ-ஆர்டினேட்டராக வேலைக்குச் சேர்ந்தார்.
ஜாஸ் சினிமாஸ் சிஇஒ
சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதியன்று சிறை சென்ற பிறகு ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக சிறைக்குள் சென்று வந்தார் விவேக். ஜாஸ் சினிமாஸ் சி.இ.ஓ.வாக 2015ல் நியமனம் செய்யப்பட்டார். தொடர்ந்து 2 ஆண்டுகளில் பீனிக்ஸ் மால் தியேட்டர்கள் லீஸ் என ஆயிரம் கோடி சர்ச்சையில் சிக்கினார். மீண்டும் 2016ல் ஜெயலலிதா முதல்வரான உடன் விவேக் திருமணம் நடைபெற்றது. விவேக் மாமனார் செம்மரக்கடத்தல் சர்ச்சையில் சிக்கவே, இந்த திருமணத்தில் ஜெயலலிதா பங்கேற்க வில்லை.
சிறை செல்லும் இளவரசி
இப்போது சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரனுடன் இளவரசியும் குற்றவாளி என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 4 ஆண்டுகள் சிறை தண்டனையை பரப்பன அக்ரஹாரா சிறையில் நான்கு ஆண்டு காலம் தள்ளப்போகிறார். சொத்துக்காக ஜெயலலிதா உடன் தங்கியிருந்து வசதிகளை அனுபவித்தவர்கள் இனி குற்றவாளிகளாக தண்டனைகளை அனுபவிக்கப் போகிறார்கள்.