வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கூலித்தொழிலாளி வெட்டிக்கொலை: புதுச்சேரியில் மர்மகும்பல் வெறிச்செயல்
புதுச்சேரியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கூலித்தொழிலாளியை மர்மகும்பல் வெட்டிக்கொலை செய்துள்ளது.
Recommended Video
வில்லியனூர் : புதுச்சேரியில் கூலித்தொழிலாளியை மர்மகும்பல் ஒன்று நள்ளிரவில் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது. கொலையாளிகளை பிடிக்கக்கோரி காவல்நிலையம் முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
புதுச்சேரியை அடுத்த வில்லியனூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஏழுமலை. மாட்டுவண்டி ஓட்டும் தொழிலாளியான இவர் தனது நண்பர்களான ரவீந்திரன்,ஜெகதீஷ் மற்றும் ரத்தினம் ஆகியோருடன் வீட்டின் வெளியில் உறங்கி கொண்டிருந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசிய பின் ஏழுமலையை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தது .மேலும் அங்கிருந்த அவர்களது நண்பர்களையும் கடுமையாக தாக்கியது.
இதனையடுத்து, மர்ம கும்பல் தப்பியோடிய நிலையில்,தகவலறிந்து வந்த வில்லியனூர் காவல்துறையினர் ஏழுமலை உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட ஏழுமலை மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு உள்ளதாகவும்,முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் எனவும் காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் காவல்துறையின் மெத்தனப்போக்கினாலேயே சம்பவம் நடந்துள்ளதாகவும் குற்றவாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தி ஏழுமலையின் உறவினர்கள் காவல்நிலையம் எதிரே முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.