ஐடி ரெய்டு நடத்தி டிடிவி தினகரனுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த முயற்சி - தளவாய் சுந்தரம்
வருமானவரித்துறையினர் சோதனை அரசியல் உள்நோக்கம் கொண்டது என டெல்லிக்கான தமிழக அரசு பிரதிநிதி தளவாய் சுந்தரம் கூறியுள்ளார்
சென்னை: அமைச்சர் விஜயபாஸ்கர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று டெல்லிக்கான தமிழக அரசு பிரதிநிதி தளவாய் சுந்தரம் கூறியுள்ளார். இது போல ரெய்டு நடத்தி டிடிவி தினகரனுக்கு கெட்டப் பெயர் ஏற்படுத்த மத்திய அரசு முயற்சி செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடு செய்யப்பட்டு வருவதாக அரசியல் கட்சிகளின் புகாரின் பெயரில் அமைச்சர் விஜயபாஸ்கர், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகங்களில் காலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள்
இந்த நிலையில் இன்று காலை தளவாய் சுந்தரம் உள்ளிட்ட அதிமுக அமைச்சர்கள் சிலரும், விஜயபாஸ்கர் ஆதரவாளர்களும் அவரது வீட்டின் கேட்டை முற்றுகையிட்டு கேட்டை திறக்க வேண்டும், உள்ளே செல்ல வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
வாக்குவாதம்
வருமான வரித்துறை எந்த இடத்தில் சோதனையிடுகிறதோ, அந்த இடத்தில் யாரும் உள்ளே நுழையக் கூடாது. அங்கிருந்து யாரும் வெளியே போகக் கூடாது என்பது விதி. அதனையும் மீறி அதிமுக அமைச்சர்கள் சிலர் விஜயபாஸ்கர் வீட்டின் முன்பு நின்று துணை ராணுவத்தினருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசுதான் காரணம்
விஜயபாஸ்கரை வெளியே வரச்சொல்லுங்கள் என்று பாதுகாப்புக்கு நின்றிருந்த துணை ராணுவத்தினரிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசும், ஓ.பன்னீர்செல்வமும்தான் இதற்கு காரணம் என்று தளவாய் சுந்தரம் குற்றம் சாட்டினார்.
மிரட்டல் விடுப்பதா?
அமைச்சர் விஜயபாஸ்கரை வருமான வரித்துறை அதிகாரிகள் மிரட்டல் விடுக்கின்றனர் என்று குற்றம் சாட்டிய தளவாய் சுந்தரம், ஆர்.கே.நகரில் டி.டி.வி.தினகரன் வெற்றி பெறுவது உறுதி என்றும் தெரிவித்தார்.
உள்நோக்கம் கொண்டது
வருமானவரித்துறையினர் சோதனை அரசியல் உள்நோக்கம் கொண்டது என டெல்லிக்கான தமிழக அரசு பிரதிநிதி தளவாய் சுந்தரம் கூறியுள்ளார். சோதனையில் ஆவணங்கள் ஏதும் கிடைக்காததால் அமைச்சருக்கு மிரட்டல் விடுப்பதாகவும், டிடிவி தினகரனுக்கு கெட்டப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த வருமான வரித்துறை ரெய்டு நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.