விமர்சித்தால் கைது செய்வதா? பாடகர் கோவனை விடுவிக்க வேண்டும்: ஆம்னஸ்டி கண்டனம்
சென்னை: 'மூடு டாஸ்மாக்கை மூடு' என்ற பாடலைப் பாடிய மக்கள் கலை, இலக்கிய கழகத்தை சேர்ந்த கோவனை விடுதலை செய்யுமாறு பொது மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.
'மூடு டாஸ்மாக்கை மூடு' என்ற பாடலைப் பாடிய மக்கள் கலை, இலக்கிய கழகத்தை சேர்ந்த கோவன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பாடிய டாஸ்மாக் பாடல் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாக உள்ளது.
இந்நிலையில் இது குறித்து பொது மன்னிப்பு சபை இந்திய பிரிவின் பிரதிநிதி அபிர் கூறுகையில்,
தமிழக அரசை கிண்டல் செய்ததற்காக ஒருவரை கைது செய்வதை ஏற்க முடியாது. கோவனை தேச நிந்தனைக்காக கைது செய்ததன் மூலம் முதல்வரையோ, அரசின் கொள்கைகளையோ விமர்சிப்பதை ஏற்க முடியாது என்ற தகவலை மக்களுக்கு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அரசை விமர்சிக்க அனைத்து இந்தியர்களுக்கும் சுதந்திரம் வேண்டும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள பேச்சுரிமையின்படி கோவன் மீதான வழக்கை ரத்து செய்துவிட்டு அவரை விடுவிக்க வேண்டும்.
தேச நிந்தனை சட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும். பொது வாழ்வில் உள்ளவர்கள் தங்களை யாராவது விமர்சித்தால் உடனே அவர்களை கைது செய்யத் துடிக்கக் கூடாது என்றார்.
மக்கள் கலை, இலக்கிய கழகத்தை சேர்ந்த சரவணன் என்பவர் பொது மன்னிப்பு சபையிடம் கூறியிருப்பதாவது,
எங்கள் வேலையை நிறுத்துமாறு தமிழக அரசு எங்களுக்கு நெருக்கடி அளித்து வருகிறது. தமிழகத்தில் மதுவால் பலரின் வாழ்க்கை எப்படி நாசமாகிக் கொண்டிருக்கிறது என்பதை தெரிவிக்க தான் கோவன் முயற்சி செய்தார். கோவனின் கைதை எதிர்த்து போராடுவோம் என்றார்.