சங்கர் கொலைக்கு ஆதரவு தெரிவித்து பகீர் பதிவுகள்.. சோஷியல் மீடியாவை கண்காணிக்கிறது போலீஸ்
சென்னை: ஜாதி மாறி கலப்பு திருமணம் செய்தமைக்காக, உடுமலைபேட்டையில் நடந்த தலித் வாலிபர் கொலையை நியாயப்படுத்தி சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் தெரிவித்து வருவது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
உடுமலைபேட்டை பஜாரில் கடந்த 13ம்தேதி தலித் இளைஞர் சங்கர் கூலிப்படையினரால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். அவரது மனைவி கவுசல்யாவும் வெட்டப்பட்டார்.
ஜாதி மாறி திருமணம் செய்ததற்காக இந்த கொலை நடந்துள்ளது அம்பலமானது. வெட்டப்படும் காட்சிகள் சிசிடிவி காமிராவில் பதிவானது. நாடு முழுவதும் மட்டுமின்றி, உலகமெங்கும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சங்கரின் கழுத்து, பின்னந்தலை வெட்டப்பட்டு கிடக்கும் போட்டோக்களும் சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளன. இது பார்ப்போர் நெஞ்சை பதறச் செய்வதாக உள்ளது. இந்த காட்சிகளை பார்த்த பலரும் நள்ளிரவில் பயத்தால் எழுந்து உட்கார்ந்து கொள்கிறோம் என்று கருத்து கூறி வருகிறார்கள்.
கொலைக்கு வக்காலத்து
அப்படியிருந்தும், குறிப்பிட்ட சிலர், இந்த கொலையை நியாயப்படுத்தி சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் தெரிவித்து வருவது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வேறு ஜாதி பெண்ணை திருமணம் செய்தாலோ, காதலித்தாலோ அரிவாள்தான் பேசும் என்று வருங்காலத்திற்கும் சேர்த்து எச்சரிக்கை விடுக்கின்றன இந்த பதிவுகள்.
விஷ கருத்துக்கள்
கடந்த பல வருடங்களாக, சமூக வலைத்தள தாக்கத்தால் இதுபோன்ற ஜாதி விஷ கருத்துக்கள் வேகமாக பரவி வருகின்றன. பேஸ்புக், டிவிட்டர் மட்டுமின்றி, வாட்ஸ்அப்பிலும் கொலைவெறி, ஒரு கவுரவம் போல பரப்பப்படுகிறது.
எவ்வளவோ வழியுள்ளது
காதலர்கள் இருவருக்கும் பக்குவம் போதாது என்றால், அவர்களை அழைத்து கவுன்சலிங் கொடுப்பது போன்ற பல்வேறு விஞ்ஞானப்பூர்வ வழிகள் இருக்கும் இந்த காலகட்டத்திலும், கற்கால மனிதர்களை போல, வெட்டுவோம், குத்துவோம் என வன்முறை கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் சிலர் பரப்பி வருகிறார்கள்.
கொலைக்கு நியாயம் கற்பிதம்
தருமபுரி இளவரசன் கொலை செய்யப்பட்ட நிலையில், அவரின் ஜாதிக்காரர் ஒருவர் பிற ஜாதியினரை விமர்சனம் செய்து பேசிய வீடியோவை இப்போது வேண்டுமென்றே சிலர் வாட்ஸ்அப்பில் பரப்பி வருகிறார்கள். இதன்மூலம் சங்கர் கொலைக்கு நியாயம் கற்பிக்க அந்த நபர்கள் முயலுவதாக தெரிகிறது.
கண்காணிப்பு
இதுபோன்ற சூழல் வருங்கால சமூகத்தை ரத்தக் களறியாக்கிவிடும் என்பதை உணர்ந்துள்ள உளவுத்துறையும், சைபர் கிரைம் போலீசாரும், ஜாதி வெறி, கொலை வெறியை பரப்புவோர் குறித்து சமூக வலைத்தளங்களில் கண்காணித்து வருகிறார்கள். இதுபோன்ற விஷமிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.