வன்கொடுமை தடுப்புச் சட்டம்: சென்னையில் திருமாவளவன், ஜான் பாண்டியன் தலைமையில் பிரமாண்ட ஆர்ப்பாட்டம்!
வன்கொடுமை தடுப்புச் சட்டத் திருத்தத்தை கைவிட கோரி சென்னையில் பிரமாண்ட போராட்டம் நடைபெற்றது.
Recommended Video
சென்னை: வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்து போகச் செய்வதைக் கண்டித்தும் நீதிமன்றம் சீண்டாதபடி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை அரசியல் சாசனத்தின் 9-வது அட்டவணையில் சேர்க்க வலியுறுத்தியும் சென்னையில் தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு பிரமாண்ட ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங், இந்திய குடியரசுக் கட்சி தலைவர் செ.கு. தமிழரசன், ஆதித் தமிழர் மக்கள் கட்சியின் கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் உச்சநீதிமன்றம் அண்மையில் திருத்தம் கொண்டு வந்தது. இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. வட இந்தியாவில் தலித்துகள் போர்க்கோலம் பூண்டனர்.
இதற்கு எதிராக ஆதிக்க ஜாதியினர் வன்முறையில் இறங்கினர். தமிழகத்திலும் வன்கொடுமை தடுப்பு சட்டத் திருத்ததுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இத்திருத்தத்தைக் கண்டித்தும் நீதிமன்றங்கள் தலையிடாத வகையில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை அரசியல் சாசனத்தின் 9-வது அட்டவணையில் சேர்க்க வலியுறுத்தியும் தலித் இயக்கங்களின் கூட்டமைப்பினர் சென்னையில் பிரமாண்ட போராட்டம் நடத்தினர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங், இந்திய குடியரசுக் கட்சி தலைவர் செ.கு. தமிழரசன், ஆதித் தமிழர் மக்கள் கட்சியின் கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நடைபெற்ற இப்போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
மத்திய, மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை
இப்போராட்டத்தால் சைதாப்பேட்டை பகுதி எழுச்சியுடன் காட்சியளித்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தொல். திருமாவளவன் பேசியதாவது: பல்லாயிரக்கணக்கிலே திரண்டு வந்திருக்கிற உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நாம் தமிழகத்தில் வலிமையுடன் இருக்கிறோம் ஆவேசத்தோடு இருக்கிறோம்...மோடி அரசை வன்மையாக கண்டிக்கிறோம்...மாநில அரசும் மெத்தனமாக இருக்கக்கூடாது என எச்சரிக்கை விடுக்கிறோம்.
லட்சக்கணக்கில் அணி திரள்வோம்
இன்னும் தலித் மக்களின் சக்தியை காட்டவேண்டும் என்கிற தேவை எழுந்தால் லட்சக்கணக்கிலே திரள்வோம். சென்னை மாநகரமே திணரக்கூடிய வகையிலே லட்சக்கணக்கிலே திரள்வோம் என நான் இங்கே எச்சரிக்கையாக சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கின்றவுடன் கம்யூனிஸ்ட்டுகள் கடுமையாக எதிர்த்து இருக்கின்றனர். ஒரு உண்மையை நான் சொல்லுகின்றேன். சிபிஎம் பொதுக்குழு கூட்டம் ஹைதராபாத்திலே நடந்தது. 4,5 நாட்களில் நடைப்பெற்ற அந்த தேசிய பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். அதிலே வன்கொடுமை தடுப்புச்சட்டத்தை 9 வது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.
எந்த சமூகத்துக்கும் எதிரானவர்கள் அல்ல
அகில இந்தியளவில் எல்லா சனநாயக சக்திகளும் ஒன்றுசேர்ந்து இந்த தீர்ப்பு அநீதியான தீர்ப்பு இதை ஏற்கமுடியாது என பெரிய தேசிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நாங்கள் எந்த ஒரு சமுதாயத்திற்கும் எதிரிகள் இல்லை. எந்த ஒர் சாதிக்கும் எதிரானவர்கள் இல்லை. ஆனால் சாதிவெறிக்கு எதிரானவர்கள். 6 அமைப்புகள் மட்டுமே கூடி அழைப்பு விடுத்தோம். அதுக்கே இன்றைக்கு சென்னையை ஸ்தம்பிக்கவைத்திருகிறது.
தலித் தலைவர்கள் ஒருங்கிணைப்பு
நாங்கள் ஆளுக்கொரு திசையாய் சிதறிக்கிடக்கின்றோம் என நீங்கள் எண்ணிவிடக்கூடாது, காலத்தில் நாங்கள் தனித்திருக்கமாட்டோம்....நாங்கள் ஒரே அடையாளத்தில் திரண்டுவிடுவோம் என்பதற்காக ஒவ்வோரு சாதியையும் பிரிக்க பல்வேறு சூழ்ச்சிகளை செய்கிறீர்கள். அந்த சூது சூழ்ச்சியெல்லாம் முறியடிக்கும் வகையில் தான் இங்கே ஜான் பாண்டியன் மேடையிலே வந்திருக்கிறார். எஸ்.டி.கல்யாணசுந்தரம் வந்திருக்கிறார். நாங்கள் ஒருபோதும் உங்கள் சதிவலைக்கு பலியாகிவிடமாட்டோம் ஒருங்கிணைந்திருப்போம். இவ்வாறு திருமாவளவன் பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து வன்கொடுமை தடுப்புச் சட்டத் திருத்தத்தைக் கைவிட வலியுறுத்தி திருமாவளவன் தலைமையில் தலித் இயக்க தலைவர்கள் மனு அளித்தனர்.