சொந்தக்காரர்கள் கேவலமாக பேசியதால் கொலை செய்தேன்: கவுசல்யா தந்தை வாக்குமூலம்
சென்னை: எனது மகள் கீழ் ஜாதியைச் சேர்ந்த பையனை கல்யாணம் பண்ணிகிட்டது எனக்கு ரொம்ப அவமானமா போச்சு. என் சொந்தக்காரர்கள் நான் எங்கே போனாலும் என்னை அவமானப்படுத்தியால் அவர்களை கொலை செய்யும் முடிவுக்கு வந்தேன் என்று உடுமலைப்பேட்டை இளைஞர் சங்கர் கொலையில் கைது செய்யப்பட்ட கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி போலீஸ் விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
உடுமலையில் காதலித்து கலப்பு திருமணம் திருமணம் செய்து கொண்ட சங்கர் - கவுசல்யா தம்பதியினர், கடந்த 13ம் தேதியன்று நடு ரோட்டில் பட்டப்பகலில் சரமாரியாக வெட்டிசாய்க்கப்பட்டனர். இதில் சங்கர் பரிதாபமாக இறந்தார். கவுசல்யா படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தனது தந்தை, தாய், மாமாதான் இந்த சம்பவத்துக்கு காரணம் என கவுசல்யா போலீசில் புகார் தெரிவித்தார். 14ம் தேதி திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை நீதிமன்றத்தில் சரணடைந்த கவுசல்யாவின் தந்தை சின்னசாமியை கைது செய்தனர் போலீசார்.
சங்கர் கொலை தொடர்பாக உடுமலை போலீசார் திண்டுக்கலை சேர்ந்த கார் டிரைவர் ஜெகதீசன், மதன் என்ற மைக்கேல், செல்வக்குமார், எம்.மணிகண்டன் மற்றும் பழனியை சேர்ந்த மணிகண்டன் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
7 நாட்கள் நீதிமன்ற காவலுக்குப் பின்னர் சின்னசாமி பலத்த பாதுகாப்புடன் உடுமலை குற்றவியல் நடுவர் மன்றத்துக்கு திங்கள்கிழமை அழைத்து வரப்பட்டார். பின்னர் நீதிபதி ஸ்ரீவித்யா முன்பு அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, சின்னசாமியை காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறை சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, சின்னசாமியை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி ஸ்ரீவித்யா உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து சின்னசாமியை போலீஸார் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது சங்கர் கொலை தொடர்பாக சின்னசாமி போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்தார். இதனை போலீசார் வீடியோவில் பதிவு செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில் தான்தான் இந்த கொலையை செய்ய சொன்னதாக சின்னசாமி ஒப்புக்கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், "எனது மகள் கீழ் ஜாதியைச் சேர்ந்த பையனை கல்யாணம் பண்ணிகிட்டது எனக்கு ரொம்ப அவமானமா போச்சு.
என் பொண்ணு மேல எனக்கு ரொம்ப பாசம் ஜாஸ்தி. எப்படியாவது வந்துடுனு கெஞ்சி பாத்தேன். மிரட்டியும் பாத்தேன். கவுசல்யாவோட அம்மாவ விட்டு கூட மிரட்டி பார்த்தேன். எதுவும் நடக்கலை. அந்த பையனுக்கு 10 லட்ச ரூபாய் கொடுக்கறேன். நீ வாங்கிட்டு போயிடு என் பொண்ணை என்கிட்ட விட்டுடுனு சொன்னேன். அவனும் கேக்கலை. ரெண்டு பேரும் பிடிவாதமா இருந்தாங்க.
இன்னொரு பக்கம் எனக்கு என் சொந்த பந்தங்க கிட்ட ரொம்ப கேவலமா போச்சு. எங்கே போனாலும் என்னை அவமானப்படுத்துனாங்க. அதனாலதான் இந்த முடிவுக்கு வந்தேன். ஜெகதீசன்கிட்ட இதைப்பத்தி சொன்னேன். என் பொண்ணை கூப்பிட்டு வா. வரலைனு சொன்னா அவளையும் கொன்னுடுனு ஜெகதீசன் கிட்ட சொன்னேன்.
ஜெகதீசன் தனது நண்பர்களுடன் சேர்ந்து சங்கரை கொல்ல திட்டம் தீட்டினார். அதன்படி தனராஜ் என்பவரை உடுமலைக்கு அனுப்பி சங்கரின் அன்றாட நடவடிக்கைகளை கண்காணித்து சரியான நேரத்தில் அவரை கொலை செய்து விட்டனர். கவுசல்யா வர மறுத்ததால் அவளை அரிவாளால் தாக்கியதாக சின்னசாமி வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சின்னச்சாமியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.