”நான் தலித். எனவே..” டிஎஸ்பிக்கு பறந்த கள்ளக்குறிச்சி ஊராட்சி தலைவர் லெட்டர்-சுதந்திரம் கிடைத்தும்..
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே எடுத்தவாய்நத்தம் ஊராட்சி மன்றத் தலைவர் சுதர வரதராஜி என்பவர் சுதந்திர தினத்தன்று கொடியேற்ற பாதுகாப்பு வழங்குமாறு மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளருக்கு கடிதம் எழுதி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே அமைந்து இருக்கிறது எடுத்தவாய்நத்தம் கிராமம். இங்கு ஊராட்சி மன்றத் தலைவராக சுதா வரதராஜி என்பவர் பதவி வகித்து வருகிறார். கள்ளக்குறிச்சி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளருக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார்.
எடுத்தவாய்நத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தீண்டாமை காரணமாக ஊராட்சி மன்றத் தலைவரை தேசிய கொடி ஏற்றக்கூடாது என்று தடுப்பதாக அவர் புகாரளித்து உள்ளார்.
ஊராட்சித் தலைவர் கடிதம்
இதுகுறித்து அவர் எழுதி இருக்கும் கடிதத்தில், "நான் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர். எங்கள் கிராமத்தில் எனக்கு முன்னாள் 10 ஊராட்சி மன்ற தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் குடியரசு மற்றும் சுதந்திர தின விழாவின்போது கொடியேற்றி வைத்து உள்ளனர்.
தீண்டாமை
என்னை பட்டியலினப் பெண் தலைவர் என்பதால் சென்ற குடியரசுத் தின விழாவின்போது கொடியேற்றக் கூடாது என்று அப்போது பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக இருந்த அ.அருண்குமார் மற்றும் துணைத் தலைவர் த.கண்ணன் ஆகியோர் தடுத்துவிட்டனர். இந்த 75 வது சுதந்திர தினத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் கொடியேற்ற வாய்ப்பளித்து தக்க பாதுகாப்பு வழங்கிய பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
75 வது சுதந்திர தின விழா
இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை மத்திய அரசு அமுத பெருவிழாவாக கொண்டாட தயாராகி வருகிறது. குறிப்பாக சுதந்திர தின விழாவுக்காக தேசியக்கொடி விதிமுறைகளில் மத்திய அரசு பல்வேறு மாற்றங்களை செய்து இருக்கிறது. கைத்தறி பருத்தி துணியால் மட்டுமே தேசிய கொடிகளை பயன்படுத்த வேண்டும் என்ற விதி இருந்த நிலையில், எந்திரத்தால் தயாரிக்கப்பட்ட பாலிஸ்டர், காட்டன், கம்பளி, பட்டு போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட தேசியக் கொடிகளை பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தேசியக்கொடி
ஆகஸ்டு 2 ஆம் தேதியில் இருந்து சுதந்திர தினமான ஆகஸ்டு 15 ஆம் தேதி வரை சமூக வலைதள கணக்குகளின் புரொபைல் படங்களில் தேசிய கொடியை வைக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். ஆகஸ்டு 13 ஆம் தேதி முதல் ஆகஸ்டு 15 ஆம் தேதி தேதி வரை வீடுதோறும் தேசியக்கொடி ஏற்ற சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.
சுதந்திரம் கிடைத்தும் தீராத அவலம்
இப்படி சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்தாலும், தேசியக் கொடிக்கான விதிகள் மாறினாலும், குடியரசுத் தலைவர்களாக பட்டியலின, பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டாலும், இங்கு நிலவும் தலித் மக்கள் மீதான சாதிய ஒடுக்குமுறைகள் மாறவில்லை என்பதற்கு கள்ளக்குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவரின் இந்த கடிதம் ஒரு உதாரணம். ஆங்கிலேயர்களிடம் விடுதலைபெற்ற இந்தியா சாதி, மத அடக்குமுறையிலிருந்து என்றுதான் விடுதலை பெறுமோ என்ற ஏக்கம் இதை பார்க்கையில் மேலோங்குகிறது.