தலித் பூசாரி தற்கொலை வழக்கு: திண்டுக்கல் கோர்ட்டில் ஓ.பி.எஸ் தம்பி ராஜா ஆஜர்- டிச.21க்கு ஒத்திவைப்பு
திண்டுக்கல்: பெரியகுளத்தில் தலித் பூசாரி தற்கொலை செய்துகொண்ட வழக்கில் அமைச்சர் ஒ.பி.எஸ் தம்பியும் பெரியகுளம் நகர்மன்ற தலைவர் ஓ.ராஜா மற்றும் 6 பேர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். இந்த வழக்கு தொடர்பான விசாரணை வருகிற 21ம்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டியை சேர்ந்த சுப்புராஜ் என்பவருடைய மகன் நாகமுத்து,22. இவர் கைலாசப்பட்டியில் உள்ள ஒரு கோவிலில் பூசாரியாக இருந்து வந்தார்.
கோயிலில் கடை ஒதுக்குவது தொடர்பாக அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பி ராஜாவுக்கும், நாகமுத்துவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதில் நாகமுத்து தாக்கப்பட்டார். புகாரை போலீசார் பெற மறுத்த நிலையில், 'என் தற்கொலைக்கு ராஜாவும், அவரது ஆதரவாளர்கள்தான் காரணம்' என கடிதம் எழுதி வைத்து விட்டு, கடந்த 2012ம் ஆண்டு நாகமுத்து தற்கொலை செய்து கொண்டார். இதன்படி ராஜா, ஆதரவாளர்கள் மணிமாறன், பாண்டியன், சரவணன், லோகு, ஞானம், சிவா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதியப்பட்டது.
நாகமுத்துவை தரக்குறைவாக பேசி தற்கொலைக்கு தூண்டியதாக பெரியகுளம் நகர்மன்ற தலைவரும், அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பியுமான ஓ.ராஜா, தென்கரை பேரூராட்சி தலைவர் பாண்டி உள்பட 7 பேர் மீது தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதன் பேரில் ராஜா மீது முதல் குற்றவாளி என குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, தேனி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கு சொந்த மாவட்டத்தில் நடைபெறுவதால் ஆளும் கட்சியின் அதிகார பலம், பண பலத்தால் தங்களுக்கு நீதி கிடைக்காது என்று நாகமுத்து குடும்பத்தினர் கூறினர்.
இந்த வழக்கை வேறு மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று நாகமுத்துவின் தந்தை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து அந்த வழக்கை திண்டுக்கல் மாவட்ட செசன்சு நீதிமன்றத்திற்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கடந்த மாதம் உத்தரவிட்டது.
விசாரணை தள்ளிவைப்பு
அதன்படி அந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் கடந்த 5ம் தேதிவிசாரணைக்கு வந்தது. நீதிபதி விடுப்பில் சென்றதால், மகிளா நீதிமன்ற நீதிபதி பிருந்தாகேசவாச்சாரி முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. இதையொட்டி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஓ.ராஜா, பாண்டி உள்பட 7 பேரும் ஆஜரானார்கள். இந்த வழக்கு விசாரணையை வருகிற 9ம்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார். மீண்டும் விசாரணைக்கு வந்த போது 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி இன்று இந்த நிலையில் இன்று செவ்வாய்கிழமை திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ராஜா உள்பட 7 பேரும் மீண்டும் ஆஜரானார்கள். திண்டுக்கல் மாவட்ட நீதிபதி சாய் சரவணன் விசாரணை நடத்தினார். அடுத்த விசாரணை 21ஆம் தேதி நடைபெறும் என்று வழக்கை ஒத்திவைத்தார்.