திருப்பூர்: காதல் திருமணம் செய்த தலித் இளைஞர் நடுரோட்டில் வெட்டிக் கொலை, மனைவி படுகாயம்
திருப்பூர்: உடுமலையில் பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் காதல் ஜோடியை சரமாரியாக அரிவாளால் ஒரு கும்பல் துடிக்க துடிக்க வெட்டிய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் தலித் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த அந்தப் பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர வி சிகிச்சை பெற்று வருகிறார். ஜாதி மாறி காதல் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த பெண்ணின் தாய் மாமாவும் அவரது நண்பர்களும் இந்த படுபாதக செயலை அரங்கேற்றியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை, கொமரலிங்கம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர், 22. இவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். இவருக்கும் பழனியைச் சேர்ந்த கவுசல்யா, 19 என்ற இளம் பெண்ணுக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்னர் காதல் ஏற்பட்டது. இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கவே இருவரும் கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.
சங்கர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதும் கவுசல்யா, வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் பெண்ணின் உறவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கவுசல்யா வீட்டை விட்டு வெளியேறி சங்கருடன் சென்று விடவே, தங்களது பெண்ணை சங்கர் கடத்தி சென்று விட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
ஆனால் இருவரும் விருப்பப்பட்டு திருமணம் செய்து கொண்டதாக காவல்நிலையத்தில் கவுசல்யா கூறியதாலும், கவுசல்யா மேஜர் என்பதாலும் சங்கரோடு செல்ல போலீசார் அனுமதித்தனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இவர்கள் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை இருவரும் பொருட்களை வாங்குவதற்காக உடுமலைக்கு வந்தனர்.
உடுமலை பேருந்து நிலையத்தில் இருந்து சாலையை கடப்பதற்காக நின்று கொண்டிருந்தனர். சந்தோசமாக பேசி சிரித்தபடியே கடைவீதிக்கு செல்ல நின்றுகொண்டிருந்தவர்களுக்குத் தங்களின் பின்னே எமன் நிற்கிறான் தெரியாது.
அப்போது அவர்களை பின்தொடர்ந்து வந்த மூன்று பேரில் ஒருவன் கத்தியால் சங்கரின் கழுத்தில் திடீரென கத்தியால் குத்தினான். மற்றொருவன் அரிவாளை எடுத்து இருவரையும் சரமாரியாக வெட்டினர்.
கத்தியால் குத்தப்பட்ட சங்கர் நடுரோட்டில் விழுந்து துடித்த போதும் விடாமல் அந்த கும்பல் வெட்டியது. இதேபோல கவுசல்யாவையும் துரத்தி துரத்தி வெட்டியதில் கணவன் மனைவி இருவரும் படுகாயமடைந்து மயங்கினர். பட்டப்பகலில் நடுரோட்டில் நடந்த இந்த சம்பவத்தினை அந்த பகுதியில் நின்ற பொதுமக்கள் வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டு நிற்க முடிந்தது.
இருவரையும் வெட்டிய பின்னர் மூவரும் சாவகாசமாக பைக்கில் ஏறி தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் அனைத்தும் அருகில் உள்ள கடையில் இருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
படுகாயமடைந்த சங்கர், கவுசல்யா ஆகியோர் உடுமலை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனை கொண்டு வரப்பட்டனர். வரும் வழியில் சங்கர் இறந்தார். கவுசல்யா படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஜாதி மாறி திருமணம் செய்ததன் காரணமாக பெண்ணின் உறவினர்கள் இந்த கொலையை செய்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக விசாரணை நந்து வருவதாகவும் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து கருத்து கூறிய சங்கரின் தந்தை, என் மகனை அடிக்கடி கொன்று விடுவதாக மிரட்டி வந்தனர். இப்போது கொலை செய்து விட்டனர். என் மகனிள் மரணத்திற்கு நீதி கிடைக்காமல் இங்கிருந்து நான் செல்லப்போவதில்லை என்று கூறினார்.
சாதி மாறி காதலித்து திருமணம் செய்த தருமபுரி இளவரசன், ஓமலூர் கோகுல்ராஜ் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் போல உடுமலையில் நடு ரோட்டில் தலித் இளைஞர் சங்கர் கொலை செய்யப்பட்ட சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.